ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட உதவியா.. பிரபல ரவுடி நாகேந்திரனின் உயிருக்கு ஆபத்து என மனைவி புகார்
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனுக்கு தொடர்பு உள்ளதாக செய்தி வெளியான நிலையில், தேசிய மனித உரிமை ஆணையத்தில் அவருடைய மனைவி விசாலாட்சி மனு தாக்கல் செய்துள்ளார். தனது கணவர் நாகேந்திரன் உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை வைத்துள்ளார். தனது கணவரை போலீஸார் என்கவுண்டர் செய்ய முடிவு செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். 52 வயதாகும் இவர், தனது குடும்பத்தினருடன் சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் வசித்து வந்தார். அங்கு புதிதாக பெரிய அளவில் வீடு கட்டி வந்தார். இதன் காரணமாக ஆம்ஸ்ட்ராங் தற்காலிகமாக சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

கடந்த ஜூலை 5ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணியளவில் ஆம்ஸ்ட்ராங் அவரது சகோதரர் வீரமணி, நண்பர் பாலாஜி, டிரைவர் அப்துல்கனி ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அங்கு நடந்த கான்கிரீட் வேலைகளை ஆம்ஸ்ட்ராங் பார்வையிட்டு கொண்டிருந்தார். அப்போது 3 இருசக்கர வாகனங்களில் 6 பேர் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல் அங்கு வந்தார்கள். அவர்கள் கையில் பட்டா கத்திகள் இருந்தன. வாகனத்தில் இருந்து இறங்கிய அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து தாக்கி கொன்றனர்.
இந்த படுகொலை தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகளை தேடினர். போலீசாரின் தீவிர வாகன சோதனையால், ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடியை சேர்ந்த 39 வயதாகும் பொன்னை பாலு , சந்தோஷ் (22), பெரம்பூர் பொன்னுசாமி நகர் 3-வது தெருவை சேர்ந்த 45 வயதாகும் திருமலை, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை பகுதியை சேர்ந்த 26 வயதாகும் மணிவண்ணன், குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்த ராமு என்கிற வினோத் (38), அருள் (33), செல்வராஜ் (48) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட குன்றத்துரைச் சேர்ந்த திருவேங்கடம் விசாரணையின் போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடய முயன்றதாக சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் 11 குற்றவாளிகளிடம் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வந்தார்கள். குற்றவாளிகளுக்கு பணப்பரிமாற்றம் ஏதும் நடந்துள்ளதா என்று வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது, அவர்களில் ஒருவரது வங்கி கணக்கில் 50 லட்சம் ரூபாய் அண்மையில் டெபாசிட் செய்யப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த பணம் அதிமுக முன்னாள் வழக்கறிஞர் மலர்கொடி என்பவர் மூலம் டெபாசிட் செய்யப்பட்டது தெரியவந்தது. இதில் மலர்கொடிக்கு உதவியதாக ஜூனியர் வழக்கறிஞர் ஹரிஹரன் மற்றும் இவர்களுக்கு உதவியாக இருந்ததாக திமுக இலக்கிய அணி பிரமுகரான சதீஷ் என 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் வடசென்னை பாஜக முன்னாள் பிரமுகர் அஞ்சலையும் முக்கிய குற்றவாளியாக போலீசார் சேர்த்து அவரையும் நேற்று கைது செய்தனர். இது ஒருபுறம் இருக்க,ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிற மாவட்ட கூலிப் படைகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்கள், அந்த வகையில், சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள வியாசர்பாடியைச் சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரனுக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சம்பந்தம் இருக்குமா? என்றும் விசாரித்து வருவதாக செய்திகள் வெளியாகின.
மேலும் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடி நாகேந்திரன், சிறையில் வைத்தே கொலை திட்டத்தை ஆற்காடு சுரேஷின் தம்பிக்கு வகுத்து கொடுத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்துள்ளதாகவும், அவரிம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனுக்கு தொடர்பு உள்ளதாக வெளியான செய்தியை அவரது மனைவி விசாலாட்சி மறுத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தனது கணவர் நாகேந்திரன் உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை வைத்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், 24 ஆண்டுகளாக என்னுடைய கணவர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்... ஆனால் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தன்னுடைய கணவருக்கு தொடர்பு இருப்பதாக சில ஊடகங்கள் பொய் செய்தி வெளியிட்டு உள்ளன.
போலீஸ் கஸ்டடியில் இருந்த திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்ததைப் போல் என்னுடைய கணவரையும் என்கவுண்டர் செய்ய காவல்துறை முடிவு செய்திருக்கிறார்கள். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன் கணவரை மருத்துவ பரிசோதனைக்காக சென்னை அழைத்து வரும் போது என்கவுண்டர் செய்ய காவல்துறை திட்டம் போட்டிருக்கிறார்கள். எனவே என் கணவரின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications