ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படுமா? சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், காவல்துறை புலன் விசாரணை சரியாக நடத்தவில்லை என்பதால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு காவல்துறை பதில் மனு தாக்கல் செய்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கை செம்பியம் காவல் துறையினர் நியாயமாக விசாரிக்கவில்லை என கூறி, விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொது செயலாளரும், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவில், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல முக்கிய அரசியல் கட்சியினரின் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்து வரும் நிலையில், மாநில காவல்துறை இந்த வழக்கை சுதந்திரமாக விசாரிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான முழுமையான நடவடிக்கைகளை போலீசார் எடுக்கவில்லை என்பதால் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பாக கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறை புலன் விசாரணை ஏதும் நடத்தவில்லை என்பதால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி, இந்த மனுவுக்கு ஜூலை 21 ஆம் தேதிக்குள் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார். கடந்த 21 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது காவல்துறையினர் தரப்பில் நேரடியாக பதில் மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் அப்போது நீதிபதி காவல் துறையினர் தரப்பில் அளித்த பதில் மனுவை ஏற்க மறுத்தார். மேலும் பதில் மனுவை பதிவுத்துறையில் காவல்துறை அதிகாரிகள் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி காவல்துறை அளிக்கும் பதில் மனுவை மனுதாரர் தரப்புக்கும் வழங்க உத்தரவிட்டார். தொடர்ந்து வழக்கு விசாரணையை ஜூலை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதன்படி இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications