ஆம்ஸ்ட்ராங் வழக்கில் புது ட்விஸ்ட்! சிறையில் இருந்தே ஸ்கெட்ச்? பிரபல ரவுடியை டார்கெட் செய்த போலீஸ்
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு அஸ்வத்தாமன் என்பவர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவரது தந்தையும் வட சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்தவருமான நாகேந்திரனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். தற்போது ரவுடி நாகேந்திரன் சிறையில் உள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக, அவரது ஆதரவாளர்கள் ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்டியதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து ஆற்காடு சுரேசின் சகோதரர் பொன்னை பாலு உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் திருவேங்கடம் என்ற ரவுடி மட்டும் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இதற்கிடையே, இந்த வழக்கில் நேற்று அதிரடி திருப்பம் ஒன்று ஏற்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் செயலாளர் அஸ்வத்தாமன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவர் சென்னை வியாசர்பாடி எஸ்.எம். நகரை சேர்ந்தவர். இவருடைய தந்தை பெயர் நாகேந்திரன், வடசென்னை பகுதியில் ஒரு காலத்தில் பெரிய தாதாவாக வலம் வந்தவர். தற்போது, ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருக்கிறார். இதனால், நாகேந்திரனும், அஸ்வத்தாமனும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய பங்காக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசார் மத்தியில் இருந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், அஸ்வத்தாமனுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து நேற்று அதிரடியாக அஸ்வத்தாமனை போலீசார் கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங்கிற்கும், சிறையில் இருக்கும் நாகேந்திரனுக்கும் பகை இருந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் வலது கையாக இருந்த தென்னரசுவின் கொலையிலும் நாகேந்திரனுக்கு தொடர்பு இருப்பதாகவும், இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஆம்ஸ்ட்ராங் வலியுறுத்தி வந்துள்ளார்.
இதையடுத்து, தென்னரசு கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தென்னரசு கொலை வழக்கில் நாகேந்திரனையும் ஒரு குற்றவாளியாக போலீசார் சேர்த்தனர். இதனால், தென்னரசு நன்னடத்தை அடிப்படையில் சிறையில் இருந்து விடுதலை ஆவதில் சிக்கல் இருந்தது. எனவே, விடுதலை தாமதம் ஆனதற்கு ஆம்ஸ்ட்ராங்தான் காரணம் என்று நாகேந்திரன் கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
தொழில் அதிபரை மிரட்டிய வழக்கில் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தனது தந்தையான நாகேந்திரன் சிறையில் இருந்து விடுதலையாவதை தடுத்ததுடன், தன்னையும் சிறையில் அடைக்க ஆம்ஸ்ட்ராங் முக்கிய காரணமாக இருந்தார் எனக் கருதி அஸ்வத்தாமன், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு, சதி திட்டம் தீட்டியதில் முக்கிய பங்காக இருந்து இருக்கிறார் என்று போலீசார் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கு சிறையில் இருந்தே ஸ்கெட்ச் போடபட்டதா? என போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள். ரவுடி நாகேந்திரனை கடந்த ஒரு வருடமாக சந்தித்தது யார் என்பது குறித்த பட்டியலை வேலூர் சிறையில் இருந்து போலீசார் வாங்கியுள்ளனர். நாகேந்திரனை கண்காணிக்கும் தனி காவலரிடம் வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் பெறப்பட்டுள்ளன. ரவுடி நாகேந்திரன் சந்தித்த நபர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக ஏதேனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனரா? என்பது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications