மீண்டும் ஆம்புலன்ஸில் இருந்து ஆம்ஸ்ட்ராங் உடலை இறக்கிய ஆதரவாளர்கள்.. வாக்குவாதம்! என்ன நடந்தது?
சென்னை: ஆம்ஸ்ட்ராங் உடலை ஊர்வலமாக எடுத்து செல்ல, அவரது ஆதரவாளர்கள் கோரிய நிலையில் போலீசார் மறுப்பு தெரிவித்ததால் ஆம்புலன்ஸில் இருந்து உடலை கீழே இறக்கினர். தொடர்ந்து, உறவினர்களும் மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னையை அடு்த்த பெரம்பூர் செம்பியம் பகுதியை சேர்ந்தவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் பெரம்பூரில் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு நேற்று இரவே கொண்டு செல்லப்பட்டது.
இன்று ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடற்கூராய்வு முடிந்தும் ஆம்ஸ்ட்ராங் உடலை வாங்க மறுத்து உறவினர்கள், ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், உளவுத் துறை ஏடிஜபியை மாற்ற வேண்டும், ஆம்ஸ்ட்ராங் உடலை பொது இடத்தில் நல்லடக்கம் செய்யவேண்டும், அவரது உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவேண்டும் எனக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிரமம், ரயில் நிலையத்துக்கு செல்வோருக்கு சிரமம், போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது என்பதால் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்படாததால் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் சிலர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள், உறவினர்கள் சமாதானம் அடையாமல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிபிஐ விசாரணை தேவை என அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
ஒருகட்டத்தில், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர், அவரது உடலை பெற்று ஆம்புலன்ஸில் ஏற்றினர். ஆனால், அவரது உடலை ஊர்வலமாக கொண்டு செல்வோம் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதற்கு போலீஸ் அனுமதி மறுத்தது. சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து இடையூறுகளை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதனால், ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை மீண்டும் கீழே இறக்கி வைத்தனர் அவரது ஆதரவாளர்கள். தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications