அரக்கோணம் இரட்டைக்கொலை... நீதி கேட்டு ஏப்.10ல் போராட்டம் அறிவித்த தொல். திருமாவளவன்
அரக்கோணத்தில் இரண்டு இளைஞர்களை படுகொலைகளைச் செய்த சாதிவெறியர்கள் மற்றும் மணல் திருடர்களை உடனடியாகக் கைதுசெய்து குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அரக்கோணத்தில் இரட்டைப் படுகொலைகளைச் செய்த சாதிவெறியர்கள் மற்றும் மணல் திருடர்களை உடனடியாகக் கைதுசெய்து குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இந்த சம்பவத்தைக் கண்டித்து, ஏப்ரல் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் அருகேயுள்ள சோகனூர் காலனியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் 20, செம்பேடு காலனியைச் சேர்ந்தவர் சூர்யா, 25 நண்பர்களான இருவரும் நேற்று இரவு கௌதம நகர் பகுதியில் 10 பேர் கும்பலால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான மேலும் 3 பேர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்கள்.
அரக்கோணம் ஷாக்.. இரு வேறு கட்சியினர் கடும் மோதல்.. 2 இளைஞர்கள் வெட்டி சாய்க்கப்பட்டு கொலை.. பதற்றம்
கொல்லப்பட்ட இளைஞர்களின் உறவினர் மற்றும் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பதற்றம் நிலவியதால் உடனடியாக நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, மொத்தம் 8 பேர் குற்றவாளிகளாக சேர்த்துள்ளது காவல்துறை. அவர்களில் மதன், அஜித், புலி, குமார் ஆகிய நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாகவுள்ள மேலும் நான்கு பேரை தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில், இரட்டை கொலையில் அ.தி.மு.க கூட்டணி கட்சிகளின் வாக்கு அரசியல் இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
அரக்கோணம் இரட்டைக்கொலை: கொலையாளிகளான சாதிவெறியர்கள் மற்றும் மணல் திருடர்களைக் குண்டர் சட்டத்தில் கைதுசெய்!
— Thol. Thirumavalavan (@thirumaofficial) April 8, 2021
தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 10 இல் ஆர்ப்பாட்டம்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!#அரக்கோணம்_படுகொலை #DalitLivesMatter pic.twitter.com/a3Sh8tJUl2
திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படுகொலைகளைச் செய்த சாதிவெறியர்கள் மற்றும் மணல் திருடர்களை உடனடியாகக் கைதுசெய்து குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும். சம்பவத்தைக் கண்டித்து, ஏப்ரல் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் காவேரிப்பாக்கம் மேற்கு ஒன்றியச் செயலாளர் பழனி என்பவர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். திருட்டு மணல் ஏற்றிய வாகனங்கள் தலித் குடியிருப்பின் வழியாக வந்தபோது அங்கிருந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தற்போது நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் வி.சி.க வேட்பாளர் கௌதமசன்னாவுக்கு ஆதரவாக பானைச் சின்னத்துக்கு அந்த கிராம இளைஞர்கள் வாக்குகள் சேகரித்துள்ளனர். அத்துடன், பாமக ஆதரிக்கும் அதிமுக வேட்பாளரை ஊருக்குள் அனுமதிக்கவில்லை.
2 வாலிபர்கள் கொலையால்.. டென்ஷன் குறையாத அரக்கோணம்.. எதிர் தரப்பு ஊருக்குள்ளேயே போய் தீ வைத்த கும்பல்
இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் சூழலைப் பயன்படுத்தி, பழனியின் மகன்களும் அ.தி.மு.க, பா.ம.க சாதிவெறியர்களும் கூட்டுசேர்ந்து இந்தப் படுகொலையை நடத்தியுள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததற்குப் பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் தலித்துகள் தாக்கப்பட்டுள்ளனர். தோல்வி பயத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர்.
காட்டுமன்னார்கோயில், வானூர், திருப்போரூர், கிருஷ்ணகிரி மற்றும் அரியலூர் தொகுதிகளிலும்கூட தலித்துகளுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்ந்துள்ளன. இத்தகைய சூழலில், இதனை வன்மையாகக் கண்டித்துக் குரலெழுப்ப வேண்டுமென அனைத்து சனநாயக சக்திகளையும் அறைகூவி அழைக்கிறோம் என்று திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.