"டாப் சீக்ரெட்".. 2 காப்பி மட்டும்தான்.. நாளை சட்டசபையில் தாக்கலாகும் 2 அறிக்கை.. ஸ்டாலினின் அதிரடி!
சென்னை: பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நாளை தமிழ்நாடு சட்டசபையில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை நாளை சட்டசபையில் வைக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அதோடு அருணா ஜெகதீசன் அறிக்கையும் சட்டசபையில் வைக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று பல்வேறு தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்தடுத்து இரண்டு நாட்களுக்கு கூட்டம் நடக்க உள்ளது.
இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தை விட கவனம் பெற்ற வேறு சில விஷயங்கள் உள்ளன. அவை, அருணா ஜெகதீசன் அறிக்கை மற்றும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை. இந்த இரண்டு அறிக்கையும் சட்டசபையில் தாக்கல் செய்யப்படுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக மெதுவாக நடந்து வந்த விசாரணை சமீபத்தில் முடிந்தது. இந்த விசாரணையின் முடிவில் அறிக்கை தயார் செய்யப்பட்டு அது தமிழ்நாடு அரசிடம் வழங்கப்பட்டது. கடந்த அமைச்சரவையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக போலீசார் விசாரணைக்கு உத்தரவிடுவது தொடர்பாகவும் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. இந்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை விவரங்கள் முழுமையாக பொதுவில் வெளியாகவில்லை.
அதே சமயம் இந்த வழக்கில் சசிகலா, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள திருமதி V.K.சசிகலா, திரு சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் C.விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் டாக்டர் இராம மோகன ராவ் உள்ளிட்டவர்கள் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் மீது சட்டவல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும், உரிய நடவடிக்கைகள் மேற்கொண்ட பின்னர், அதற்கான விபர அறிக்கையுடன், ஆணையத்தின் அறிக்கையை, சட்டப்பேரவையில் வைக்கவும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது, என்று தமிழ்நாடு அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் அந்த அறிக்கை நாளை தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அதோடு தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கையும் சட்டசபையில் வைக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இதில் போலீஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது தொடர்பான விவரங்கள் இணையத்தில் வெளியாகின. இந்த அறிக்கையின் சில பகுதிகள் ஏற்கனவே ஊடகங்களில் கசிந்தன.
இந்த நிலையில்தான் இரண்டு அறிக்கையும் நாளையே சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். ஆனால் இந்த அறிக்கைகள் பற்றி இப்போது விவாதிக்க முடியாது. நாளை அவையில் தாக்கல் செய்யப்பட்ட பின் அதை பற்றிய விவரங்கள் உங்களுக்கு தெரியும். இப்போது எதுவும் தெரிவிக்க முடியாது என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை தொடர்பாக கோட்டை வட்டாரத்தில் விசாரித்ததில், முதல்வர் ஸ்டாலின் இரண்டு அறிக்கைகளையும் நாளையே தாக்கல் செய்யும் திட்டத்தில் இருக்கிறார். தீபாவளி முன்பே பட்டாசு வெடிக்க போகிறது. இரண்டு அறிக்கையிலும் பல முக்கிய விவரங்கள் இருக்கும். ஏற்கனவே அருணா ஜெகதீசன் அறிக்கையில் சில பகுதிகள் லீக்காகிவிட்டன.
அதேபோல் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் சில பக்கங்கள் எதிர்க்கட்சி கைக்கும் சென்றுள்ளது. ஆனால் எதுவும் முழுமையாக கசியவில்லை. இதனால் அந்த இரண்டு அறிக்கைகளையும் சீக்ரெட்டாக வைத்து நாளை தாக்கல் செய்ய உள்ளனர். இதை மொத்தம் 2 காப்பி மட்டும் போட்டு ஒன்றை சபாநாயகரிடம், ஒன்றை முதல்வரிடமும் கொடுத்துள்ளனர், என்று தெரிவித்துள்ளன.











Click it and Unblock the Notifications