தமிழ்நாட்டில் தொகுதிக்கு 10 ஆயிரம் வாக்குகள் கூடியிருக்கு.. கார்த்தி சிதம்பரம் சொன்ன பாய்ண்ட்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பதிவிட்டுள்ளார். கடந்த தேர்தலை விடவும் 24 லட்சம் வாக்குகள் அதிகரிப்பு என்பது வழக்கத்திற்கு மாறான ஒன்று அல்ல என்று கூறிய கார்த்தி சிதம்பரம், கடந்த 3 தேர்தல்களாகவே வாக்களிப்போரின் எண்ணிக்கை சீராக உயர்ந்து வருவதாகவும் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நேற்று சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் நடத்தி முடிக்கப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. கோடை வெயில் காரணமாக காலையில் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் 85.15% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் பெண் வாக்காளர்களில் 85.76% பேரும், ஆண் வாக்காளர்களில் 83.57% பேரும் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். குறிப்பாக சென்னையில் 83.74% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 92.63% வாக்குகளும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.61% வாக்குகளும் பதிவாகியுள்ளது.
வாக்குப்பதிவு நிறைவடைந்த பின் கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. அந்தந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. கடந்த தேர்தலை ஒப்பிடும் போது இந்த தேர்தலில் வாக்கு சதவிகிதம் அதிகரித்தாலும், வாக்குகளை ஒப்பிடும் போது சுமார் 24 லட்சம் வாக்குகள் வரை உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் எழுதியுள்ள பதிவில், வாக்குகளின் சதவிகிதத்தை விட மொத்த வாக்குகளின் எண்ணிக்கைக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். கடந்த 3 சட்டசபைத் தேர்தல்களிலும் ஒவ்வொரு தொகுதியாக பதிவான மொத்த வாக்குகளை ஒப்பிட்டு பாருங்கள். அப்படி ஒப்பிட்டு பார்த்தால், ஒவ்வொரு தொகுதியிலும் சீரான உயர்வு ஏற்பட்டிருப்பதை உங்களால் காண முடியும்.
அதேபோல் முந்தைய தேர்தல்களை போல் அல்லாமல், இம்முறை தேர்தல் தரவுகள் உடனடியாக வெளியிடப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் 24 லட்சம் வாக்குகள் உயர்ந்துள்ளது. அதன் அடிப்படையில் தொகுதிக்கு 10 ஆயிரம் வாக்குகள் உயர்ந்திருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இதனால் SIR காரணமாக வாக்கு சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளதாகவும், வாக்குகள் அதிகரிக்கவில்லை என்ற விவாதமும் தீவிரமாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications