கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா?
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகியவை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து மொத்தம் 35 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. இத்தனை தொகுதிகள் கிடைத்துள்ள நிலையில், கட்சியின் முக்கிய முகமாக பார்க்கப்படும் அண்ணாமலைக்கு ஒரு தொகுதியாவது ஒதுக்கப்படாதது ஏன் என்ற கேள்வி கட்சித் தொண்டர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் இதற்கெல்லாம் அண்ணாமலை தான் காரணம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
அண்ணாமலை மற்றும் அதிமுக இடையிலான உறவு கடந்த மக்களவைத் தேர்தல் காலத்திலிருந்தே சீராக இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை இடையேயான மோதல், கூட்டணியே உடையும் நிலைக்கு சென்றது.
இருந்தபோதிலும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் பாஜக மேலிடம் செயல்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமியுடன் நல்ல தொடர்பு வைத்திருந்த நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.

அதிமுக பாஜக கூட்டணி
இதன் மூலம் கூட்டணியில் ஏற்படும் சிக்கல்கள் குறையும் என பாஜக மேலிடம் கருதியது. இருப்பினும் தமிழகம் முழுவதும் அண்ணாமலை நியமித்த நிர்வாகிகள் பலரும் முக்கிய பதவிகளில் தொடர்ந்ததால், அவர் கட்சியின் அறிவிக்கப்படாத தலைவராகவே செயல்பட்டு வருகிறார் என்ற கருத்தும் நிலவுகிறது. பெரிய அளவிலான கட்சி கூட்டங்கள் அல்லது முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அண்ணாமலையின் பெயர் குறிப்பிடப்படும் போது தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளிப்பது ஆகியவை தொடர்ந்தது.
அண்ணாமலை
இதனால் அவர் இன்னும் கட்சியின் முக்கிய முகமாகவே உள்ளார் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகும். இந்நிலையில், இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்தது. அவருக்கு சீட் ஒதுக்கவில்லை என்ற தகவலால் அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். ஆனால், இது அண்ணாமலையே எடுத்த முடிவு என்கின்றனர் கமலாலய வட்டாரத்தினர். ஜோதிடர் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் இந்த தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவை அண்ணாமலை எடுத்திருக்கலாம் என்கின்றனர்.
நாடி ஜோதிடர் எச்சரிக்கை
அண்ணாமலை தனது ஜாதக நிலை குறித்து சமீபத்தில் பெங்களூரில் உள்ள ஒரு நாடி ஜோதிடரை சந்தித்து ஆலோசனை பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது ஜோதிடர், இன்னும் சில காலம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், இந்த நேரத்தில் எடுத்துக் கொள்ளும் முக்கிய முடிவுகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
அண்ணாமலை போட்டி?
மேலும் சரியான தொகுதி கிடைக்காமல் போட்டியிட்டு மீண்டும் தோல்வி அடைந்தால், அரசியல் எதிர்காலமே பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் நல்ல காலம் வரும் வரை தேர்தலில் போட்டியிடாமல் காத்திருக்க வேண்டும் என்ற ஆலோசனையை ஜோதிடர் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, இந்த தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற எண்ணத்தில் அண்ணாமலை இருப்பதாக கூறப்படுகிறது.
பாஜக மேலிடம்
இருப்பினும் அவருடைய ஆதரவாளர்கள் மட்டும், குறிப்பாக கொங்கு மண்டலத்தில் கிடைக்கும் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில் கட்சி மேலிடமும் அண்ணாமலை போட்டியிட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. முக்கிய தலைவராக உள்ள அவர் களமிறங்கினால் கட்சிக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இந்த அழுத்தம் கொடுக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், அண்ணாமலை இந்த தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா? என்பதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.












Click it and Unblock the Notifications