ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த அஸ்வத்தாமன் வெளிநாடு தப்ப முயற்சி.. ஏர்போர்ட்டில் கைது
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அஸ்வத்தாமன் வெளிநாடு தப்ப முயன்றபோது கைது செய்யப்பட்டார். பெங்களூர் வழியாக தாய்லாந்துக்கு விமானத்தில் தப்பிச் செல்ல முயன்றபோது அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

மேலும் சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்ட 2 பேர் தலைமறைவாக இருந்து வருகின்றனர். இந்த வழக்கில் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த முக்கிய குற்றவாளியான நாகேந்திரன் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இதனிடையே இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான அஸ்வத்தாமன், அஞ்சலை, ஹரிஹரன், ஆற்காடு சுரேஷ் மனைவி பொற்கொடி, அப்பு, முகிலன் உள்ளிட்ட 12 பேருக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து, அஸ்வத்தாமன் உள்ளிட்டோர் அண்மையில் நீதிமன்ற ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தனர். ஆனால் இவர்கள், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்கு சென்னை பெருநகர காவல்துறை பிணையில் வெளியே வந்தவா்களுக்கு எதிராக வழங்கப்படும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு சா்வதேச விமான நிலையத்தில் இருந்து அஸ்வத்தாமன், தாய்லாந்து நாட்டின் பாங்காக் செல்ல புதன்கிழமை முயன்றார். இதைப் பாா்த்த குடியுரிமைத் துறை அதிகாரிகள், லுக் அவுட் நோட்டீஸ் அடிப்படையில் அஸ்வத்தாமனை பிடித்து, சென்னை பெருநகர காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதையடுத்து சென்னை போலீசார், அஸ்வத்தாமனை கைது செய்து, சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் வழக்கில் ஏ2 குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் அஸ்வத்தாமன். ஏ1 குற்றவாளியான நாகேந்திரன் உயிரிழந்த நிலையில் முக்கிய குற்றவாளியாக அஸ்வத்தாமன் இருக்கிறார். இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த அவர் வெளிநாட்டுக்கு தப்ப முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடு தப்பிச் செல்ல முயன்று பிடிபட்ட அஸ்வத்தாமனின் ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றத்தில் முறையீடு செய்ய காவல்துறை முடிவு செய்துள்ளது. நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறியதால், அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.













Click it and Unblock the Notifications