ஒசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்டது தொழில் ரீதியானது அல்ல.. தனிப்பட்ட காரணம்: ஐகோர்ட் தலைமை நீதிபதி
சென்னை: ஒசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொழில் ரீதியானது அல்ல, தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துள்ளது என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம் என்றும் ஐகோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நீதிமன்ற நுழைவாயில் அருகே நேற்று வழக்கறிஞர் கண்ணன் என்பவரை ஆனந்தன் என்பவர் அரிவாளால் கொடூரமாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோர்ட் வளாகத்திலேயே வழக்கறிஞர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, ஆபத்தான நிலையில் கண்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வழக்கறிஞர் கண்ணனை வெட்டிவிட்டு தப்பிய ஆனந்தன் நேற்று நீதிமன்றத்தில் சரண் அடைந்த நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி சத்யாவதியையும் காவல்துறை கைது செய்துள்ளது. முன் விரோதம் காரணமாக இந்த கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளார் நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக பணியாற்றும் ஆனந்த குமார்.
இந்நிலையில், வழக்கறிஞர் கண்ணன் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. தலைமை நீதிபதி அமர்வில் அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன் இதுதொடர்பாக முறையீடு செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஓசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொழில்ரீதியானது அல்ல, தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துள்ளது. ஒவ்வொரு நபருக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம். வழக்கறிஞர்கள் பாதுகாப்பு குறித்து அரசுடன் ஆலோசிக்க தலைமை வழக்கறிஞர் ஏற்பாடு செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
உள்துறை செயலாளர், டிஜிபி, வழக்கறிஞர் சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் ஆலோசிக்க அரசு தலைமை வழக்கறிஞர் ஏற்பாடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஜனவரி 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications