நாடாளுமன்ற தாக்குதல்.. இந்திய இறையாண்மைக்கு சவால்.. கடும் நடவடிக்கை தேவை - எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: நாடாளுமன்ற வளாகத்தில் இரண்டு பேர் அத்துமீறி நுழைந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2001 டிசம்பர் 13ஆம் தேதி டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஆயுதங்கள் உடன் நுழைய முயன்ற பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சிலரும் வீர மரணம் அடைந்தனர். இதன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் மீண்டும் அதே போல ஒரு சம்பவம் நாடாளுமன்றத்திற்குள் நடந்துள்ளது.

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள லோக்சபாவில் இன்று அவை நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர் மாடத்தில் இருந்து இரண்டு பேர் குதித்து எம்.பிக்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகள் மீது தாவி சென்றனர். அனைவரும் பதற்றமடைந்து பார்த்துக்கொண்டிருக்கும் போதே மஞ்சள் நிற வண்ணங்களை உமிழும் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
அவர்களை எம்.பிக்கள் சுற்றி வளைத்தனர். பின்னர் போலீசார் வந்து கைது செய்து அழைத்து சென்றனர். இதுவரை இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் கண்ணீர் புகைக் குண்டுகளுடன் அத்துமீறி இருவர் நுழைந்ததற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்றதன் நினைவு தினமான இதே நாளில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது வேதனைக்குரியது.
இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவதுடன், இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக வலிமைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.












Click it and Unblock the Notifications