32 ஆண்டுகால உழைப்பு வீண்.. கைவிட்ட செங்கோட்டையன்... சிந்து ரவிச்சந்திரன் திமுகவில் இணைந்த பின்னணி..!
சென்னை: அதிமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனின் நிழலாக வலம் வந்த சிந்து ரவிச்சந்திரன், கடந்த வியாழக்கிழமை அன்று திமுகவில் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்த சிந்து ரவிச்சந்திரன் கடந்த அதிமுக ஆட்சியில் சிட்கோ தலைவராக இருந்தவர். செங்கோட்டையனுக்கு நிழலாக இருந்த இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அந்தியூர் தொகுதியில் போட்டியிட சீட் எதிர்பார்த்து இறுதியில் ஏமாற்றத்தை சந்தித்தவர்.

கடந்த 1989-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையை ஏற்று அதிமுகவில் இணைந்தவர் சிந்து ரவிச்சந்திரன். கிளைச் செயலாளராக அதிமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர்.
என்னதான் கட்சி ரீதியாக பல்வேறு பதவிகள் அடுத்தடுத்து தேடி வந்தாலும், அரசியல்வாதிகளுக்கே உரிய வாழ்நாள் ஆசையான எம்.எல்.ஏ., எம்.பி.,சீட் பெறுவதற்கான முயற்சிகளை சிந்து ரவிச்சந்திரன் கைவிடவில்லை. 2009, 2014, 2019, என மூன்று நாடாளுமன்றத் தேர்தலின் போதும் அதிமுகவில் எம்.பி.சீட் எதிர்பார்த்து அவருக்கு கிடைக்கவில்லை.
இதேபோல், எம்.எல்.ஏ. சீட்டுக்காக ஒவ்வொரு தேர்தலின் போதும் கடும் முயற்சிகளை மேற்கொண்டும் அது எதுவுமே அவருக்கு பலனளிக்கவில்லை. இந்நிலையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அந்தியூர் தொகுதியில் தனக்கு எப்படியும் தனது அரசியல் குருநாதர் செங்கோட்டையன் சீட் வாங்கிக் கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையில், அங்கு கோடிகளை கொட்டி வைத்திருந்தார்.
இறுதியில் நான் என்னப்பா செய்றது, அவங்க எடுப்பது தான் முடிவாக உள்ளது எனக் கூறி தனது சிஷ்யன் சிந்து ரவிச்சந்திரனை கைவிட்டுவிட்டார் செங்கோட்டையன். இதனால் அதிருப்தி மனநிலையிலும், சீட் கொடுக்காத எடப்பாடி பழனிசாமி மீது கொதிநிலையிலும் இருந்திருக்கிறார் சிந்து ரவிச்சந்திரன்.
இந்த தகவலை அறிந்த அமைச்சர்கள் செந்தில்பாலாஜி மற்றும் முத்துச்சாமி தரப்பினர், சிந்து ரவிச்சந்திரனிடம் பேசியிருக்கின்றனர். புண் பட்ட மனதுக்கு மருந்தளித்தது போல் திமுகவின் சில வாக்குறுதிகள் பிடித்துப்போக உடனடியாக தனது ஆதரவாளர்களுடன் ஸ்டாலினை சந்திப்பதற்காக சென்னையை நோக்கி புறப்பட்டுவிட்டார் சிந்து ரவிச்சந்திரன்.
இந்த தகவல் அதிமுக தலைமைக்கு சென்றதை அடுத்து, உடனடியாக செங்கோட்டையனை தொடர்பு கொண்ட மேலிடம் சிந்துவிடம் பேசுங்கன்னா, இருக்க வைங்க பேசிக்கலாம் எனக் கூறியிருக்கிறது. இதையடுத்து செங்கோட்டையனும் சிந்து ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு இருப்பா பார்த்துக்கலாம் என உருகியுள்ளார்.

ஆனால் அதற்குள் முதலமைச்சரின் அப்பாயிண்ட்மெண்ட் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டதால், இனிமேல் தன்கையில் எதுவுமில்லை என செங்கோட்டையனிடம் கூறிவிட்டு வியாழக்கிழமை சென்னை வந்திறங்கியுள்ளார் சிந்து ரவிச்சந்திரன்.
இதையடுத்து ஸ்டாலினை சந்திப்பதற்கு முன்னரே அவரை கட்சியிலிருந்து நீக்க முடிவெடுத்து அதிமுக தலைமை, சிந்து ரவிச்சந்திரனை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது. இதனிடையே அவருடன் ஈரோடு மாவட்ட பஞ்சாயத்து தலைவர், மாவட்ட கவுன்சிலர்கள் 3 பேர், ஒன்றியச் செயலாளர்கள் 2 பேர் என ஈரோடு மாவட்ட அதிமுகவின் முக்கிய புள்ளிகளும் திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications