பிஎஸ்பி ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. திமுக ஆட்சியில் காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளது.. ஜெயக்குமார்
சென்னை: ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சியளிக்கிறது என்றும், எங்களது ஆட்சியில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை இந்த ஆட்சியில் கைகள் கட்டப்பட்டு உள்ளது என்றும் தொடர் கொலைகள் நடந்து வரும் நிலையில் இந்த அரசு எதைப்பற்றியும் கவலைப்படாமல் தூங்கிக்கொண்டிருக்கிறது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52). இவர் சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் புதிதாக வீடு கட்டி வந்தார். இங்கு தான் இவரது பழைய வீடு இருந்தது. இதை இடித்து தற்போது இவர் புது வீடு கட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை இங்கு வந்திருந்த ஆம்ஸ்ட்ராங்கை மர்ம கும்பலினர் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சென்னையில் நடந்த இந்த கொலை சம்பவம் தொடர்பாக நேற்று 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது ஏன் என்றும் கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனை முடிந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சென்னை அயனாவரத்தில் உள்ள இல்லத்துக்கு ஆம்ஸ்ட்ராங் உடல் கொண்டு செல்லப்பட்டது. நாளை காலை இவரது உடல் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக சார்பில் ஆஸ்பத்திரிக்கு வந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, எங்களது ஆட்சியில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை இந்த ஆட்சியில் கைகள் கட்டப்பட்டு உள்ளது என்றும் தொடர் கொலைகள் நடந்து வரும் நிலையில் இந்த அரசு எதைப்பற்றியும் கவலைப்படாமல் தூங்கிக்கொண்டிருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். ஜெயக்குமார் கூறியதாவது:-
தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.. அதிர்ச்சியளிக்கிறது.. இந்த சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்டு இருப்பது என்பதற்கு இந்த தொடர் கொலைகள் சான்றாக உள்ளது. ஒரு கட்சியின் தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் பார்க்க வேண்டும்.
ஆட்சி பொறுப்பேற்ற ஸ்டாலின், தொடர் கொலைகளை எல்லாம் தடுத்து நிறுத்தாமல் உள்துறையை கையில் வைத்துக்கொண்டு இருக்கிறார். கூலிப்படை கொலைகள் அதிகம் நடந்த போதும் இதுவரை இதனை தடுக்க முதல்வர் ஸ்டாலின் ஒரு கூட்டம் கூட நடத்தவில்லை. நெல்லையில் காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் படுகொலை செய்யப்பட்டார். எங்களது ஆட்சியில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை இந்த ஆட்சியில் கைகள் கட்டப்பட்டு காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கில் இன்னும் குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறது.
இதேபோல் சேலத்தில் விளக்கை எல்லாம் அணைத்துவிட்டு அதிமுக சகோதரர் படுகொலை செய்யப்படுகிறார். இதேபோன்று கடலூரில் அதிமுக நிர்வாகி படுகொலை செய்யப்படுகிறார். இப்படி வரிசையாக கடந்த 3 ஆண்டுகளில் அரசியல் கொலைகள் கூலிப்படைகளால் ஏவப்பட்டு தொடந்து கொலைகள் நடந்து வரும் நிலையில், எதைப்பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை என்று சொல்லி.. யார் செத்தால் என்ன? யார் போனால் என்ன? என்ற நிலையில், விடியா தூங்குமூஞ்சி அரசாங்கம் தூங்கிக்கொண்டிருக்கிறது.
ஒரு அரசியல் கட்சி தலைவருக்கு இப்படி ஒரு ஆபத்து நேரும் போது, இதற்கு முன்னதாக புலனாய்வுத்துறை என்ன செய்துகொண்டிருந்தது. மிகவும் துயரப்படக்கூடிய வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலை சென்னையில் நடந்துள்ளது. மேற்கொண்டு தமிழ்நாட்டில் கூலிப்படைகளின் அட்டகாசத்தை குறைத்து அரசியல் தலைவர்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications