ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கு.. 5 தனிப்படை அமைத்தது போலீஸ்.. கொலையாளிகளை பிடிக்க தீவிரம்
சென்னை: சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 3 மோட்டார் சைக்கிள்களில் வந்து வெறிச்செயலில் ஈடுபட்டவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக 5 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவருக்கு வயது 52. இவர் சென்னை பெரம்பூர் அருகே செம்பியன் பகுதியில் வசித்து வருகிறார். இன்று இரவு 7 மணியளவில் வீட்டின் முன் நின்று சிலருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலினர் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு பல இடங்களில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அப்படியே சரிந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதையடுத்து ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை கிரீம் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலினின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் கொலையாளிகளை வலைவீசித் தேடி வருகின்றனர். ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்ற கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
டூ-வீலர்களில் வந்த 6 பேர் கும்பல்.. வீட்டுக்கு முன்பாகவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை! அலறிய பெரம்பூர்!
இந்த சம்பவம் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே பகுஜன் சமாஜ் கட்சியினர் பலரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு குவிந்தனர். அவர்கள் கொலையாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு போலீஸ் முன்பு முழக்கம் எழுப்பினர்.
சம்பவம் நடந்த பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் காரணமாக பெரம்பூர் செம்பியம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கொலையாளிகளை பிடிக்க போலீசார் 5 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications