பெங்களூருக்கு போறீங்களா.. அப்ப ஆர்டிபிசிஆர் டெஸ்ட் நெகட்டிவ் ரிசல்ட்டோட போங்க
சென்னை: வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலம் கொரோனா பரவுவதை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு வருவோருக்கு அந்த மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கர்நாடகாவில் கொரோனா முதல் அலையை காட்டிலும் 2ஆவது அலை தீவிரமாக இருந்தது. இதனால் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்தது. மேலும் தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்து வந்தனர்.
இதையடுத்து மாநில அரசு எடுத்த தீவிர நடவடிக்கையாலும் முழு ஊரடங்கை அமல்படுத்தியதாலும் கொரோனா கேஸ்கள் படிப்படியாக குறைந்தன. இதையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனாவின் 3ஆவது அலை தொடங்கியதாக கூறப்படுகிறது.

முன்னோட்டம்
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தென்னிந்தியாவில் கொரோனோ பரவல் அதிகரித்து வருகின்றன.பெங்களூருவில் தினசரி பாதிப்பு 400-க்கும் அதிகமாகவே உள்ளது. இது கொரோனாவின் 3ஆவது அலையின் முன்னோட்டமாக இருக்கலாம் என கர்நாடகா அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் உள்பட வெளிமாநிலங்கள்
இந்த நிலையில் தமிழகம் உள்பட வெளிமாநிலங்களிலிருந்து பெங்களூர் வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூர் வருவோர் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை காட்ட வேண்டும் என பெங்களூர் மாநகராட்சி அறிவித்துள்ளது.

மாநகராட்சி தலைமை அதிகாரிகள்
இதுகுறித்து மாநகராட்சி தலைமை அதிகாரிகள் கூறுகையில் தமிழகம் உள்பட வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வரும் நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை காட்ட வேண்டும். ஒரு வேளை அவர்கள் சான்றிதழ் இல்லாமல் வந்தால் சளி மாதிரி எடுக்கப்பட்டு அதன் முடிவுகள் வரும் வரை அரசின் கண்காணிப்பு முகாம்களில் அவர்கள் தங்கவைக்கப்படுவார்கள்.

மக்களே ஏற்க வேண்டும்
இதற்கு ஆகும் செலவை அவர்களே ஏற்க வேண்டும். இதற்கான கட்டணத்தை நாங்கள் நிர்ணயம் செய்துள்ளோம். பரிசோதனையின் முடிவில் கொரோனா இல்லை என்றால் அவர்கள் முகாம்களிலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர். ஒரு வேளை தொற்று உறுதியானால் அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவார்கள்.

ஊரடங்கு
பெங்களூரில் தற்போது உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளே அமலில் இருக்கும். புதிதாக எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்க போவதில்லை. ஒரு வேளை கொரோனா பாதிப்பு அதிகரித்தால் வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும். பெங்களூருவில் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளில்தான் அதிகளவில் கொரோனா பரவி வருகிறது என்றனர்.












Click it and Unblock the Notifications