Exclusive: அதிமுக செயற்குழுவில் என்ன நடக்கப்போகிறது தெரியுமா? பீடிகை போடும் பெங்களூரு புகழேந்தி!
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் நாளை அதிமுகவின் செயற்குழு நடைபெறவுள்ள நிலையில் அக்கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி பீடிகையுடன் பல புதிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
தன்னை அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள அவர் தொடர்ந்து சட்டப்போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.
இந்த சூழலில் ஒன் இந்தியா தமிழிடம் அவர் பகிர்ந்துகொண்ட தகவல் பின்வருமாறு;

ஆருடம்
''நாளை நடைபெறவுள்ள அதிமுக செயற்குழு கூட்டமானது அவசரக் கதியில் அள்ளித்தெளித்த கோலம் போல் இருக்கப்போகிறது. இவர்கள் எதற்காக இப்படி அவசர அவசரமாக செயற்குழுவை கூட்டுகிறார்கள் தெரியுமா, சசிகலா தொடர்ந்த வழக்கு 9-ம் தேதி வாதத்திற்கு வருகிறது. அந்த வாதம் முடிந்து ஒரு வேளை சசிகலா பக்கம் தீர்ப்பு வெளியானால் அண்ணா திமுக அலுவலகத்தை விட்டு ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும் நடையை கட்ட வேண்டியது வரும். இதற்கு தான் செயற்குழு கூட்டத்தை கூட்டி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளில் நிரந்தரமாக அமர்ந்துகொள்ள துடிக்கிறார்கள்.''

பீடிகை
''நிச்சயம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை பற்றி செயற்குழுவில் பேசவேமாட்டார்கள். தங்கள் பதவிகளுக்கு பாதகம் வந்துவிடாத வண்ணம் நிர்வாக அமைப்புகளை மாற்ற நாளை முயற்சிப்பார்கள். இது ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணமும் உள்ளது, எனக்கு கிடைத்த தகவல்படி ஜால்ரா அடிக்கக்கூடிய அண்ணன் ஜெயக்குமாரை அவைத்தலைவர் பதவியில் அமர வைக்க இருக்கிறார்களாம். பாவம் செங்கோட்டையன் அவரை அசிங்கப்படுத்தும் வகையில் மாவட்டச் செயலாளர் பதவியை கொடுத்து ஓரங்கட்டி விட்டார்கள்.''

ஜால்ரா
''தங்களுக்கு ஜால்ரா அடிக்கக்கூடிய தோதான ஆட்களை பொறுப்புகளுக்கு மாற்றி அமைப்பது பற்றி நாளை செயற்குழுவில் பேசுவார்கள். இனி மேல் தானே அதிமுகவுக்குள் கச்சேரியே இருக்கப்போகிறது, அதை நீங்களும் பார்க்கத்தானே போகிறீர்கள். நான் சொல்கிறேன், அதிமுக செயற்குழுவில் பிரச்சனை கிளம்பும். எவ்வளவு பேர் என்னை தொடர்பு கொண்டு புலம்புகிறார்கள் தெரியுமா, எல்லாருமே முக்கியப் பிரமுகர்கள் தான். இதனால் இந்த செயற்குழு எல்லாம் செல்லாது என்ற நிலை விரைவில் உருவாகும்'' என தனக்கு தோன்றிய கருத்துக்களை தெரிவித்தார் பெங்களூரு புகழேந்தி.

பாபு முருகவேல்
இதனிடையே பெங்களூரு புகழேந்தியின் கருத்துக்கு பதில் கேட்பதற்காக அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி பாபு முருகவேலை நாம் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது கூறிய அவர், ''பெங்களூரு புகழேந்தி யார், அவருக்கும் அதிமுகவுக்கும் என்ன தொடர்பு. நாங்கள் எப்படி வேண்டுமானாலும் அவைத்தலைவரை நியமித்துக்கொள்கிறோம். அதைப்பற்றி அவருக்கு ஏன் கவலை. வருடத்துக்கு இரண்டு முறை செயற்குழுவும், ஒரு முறை பொதுக்குழுவும் நடத்த வேண்டியது கட்சியின் கடமை. அதை தான் செய்கிறோமே தவிர அவசரக் கதியில் எல்லாம் எதற்காகவும் நடத்தவில்லை'' என பதில் அளித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications