உ.பி, பீகாரில் உள்ள அதே சட்டங்கள்.. தமிழகத்தில் இறங்கி அடித்த பாஜக.. தேர்தல் அறிக்கையில் ஷாக்.. பரபர
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்காக பாஜக வெளியிட்ட இருக்கும் தேர்தல் அறிக்கையில் பல பரபரப்பு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளது. உத்தர பிரதேசம், பீகார் போன்ற பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களில் உள்ள அதே சட்டங்களை வாக்குறுதியாக பாஜக தமிழகத்தில் அறிவித்துள்ளது.
இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்க வேண்டும், ஒரே மாதிரியான சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. பாஜக ஆட்சியை பிடிக்கும் மாநிலங்களில் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சட்டங்கள், தடைகள் கொண்டு வரப்படுகின்றன.
இந்த நிலையில் தமிழகத்திலும் மாற்றமில்லாமல் துணிச்சலாக பாஜக சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. நேற்று பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இருக்கும் சில விஷயங்களின் ஹைலைட்ஸ்தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பசுவதை தடை சட்டம்
பாஜகவின் தேர்தல் அறிக்கையின்படி தமிழகத்தில் பசுவதைத் தடைச்சட்டம் அமல்படுத்தப்படும். அதாவது இனி உணவகங்களில் மாட்டுக்கறி சாப்பிட தடை விதிக்கப்படும். அதோடு பசு ஏற்றுமதி தடைசெய்யப்படும் , மீட்கப்படும் பசுக்களுக்கு கோவில்களில் கோசாலைகள் அமைத்துப் பாதுகாக்கப்படும். உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருக்கும் சட்டத்தை தமிழகத்திலும் கொண்டு வருவதாக பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.

வாக்குறுதி
அதோடு இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகம் அரசிடமிருந்து தனியே இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும். அரசிடம் இருந்து இந்து கோவில்களை மீட்க வேண்டும் என்று சத்குரு உள்ளிட்டோர் சமீப நாட்களாக குரல் கொடுத்து வருகிறார்கள். இதை முன்னிட்டு பாஜகவும் இதே விஷயத்தை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வெளிமாநிலம்
வெளிமாநிலத் - தொழிலாளர்களுக்கு குடியிருப்பு - வசதிகள் செய்துதரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் இருக்கும் வடஇந்திய ஊழியர்கள் சொந்த வீடுகளை பெறுவார்கள். அவர்கள் இங்கேயே தங்கி வாக்கு அளிக்க முடியும். இவர்களின் வாக்கு வங்கியை கவரும் வகையில் பாஜக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை
ஆதி திராவிடர் நலத்துறை என்பது பட்டியலின மக்கள் நல்வாழ்வுத்துறை என பெயர்மாற்றம் செய்யப்படும், என்றும் பொருளாதாரரீதியாக நலிவடைந்தவருக்கான 10%(EWS) இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்றும், தேசிய கல்விக் கொள்கை முழுமையாக அமல்படுத்தப்படும் என்றும் பாஜக கூறியுள்ளது. இது மூன்றுமே பெருவாரியான தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்த திட்டங்கள் ஆகும்.

எதிர்ப்பு
பள்ளி பாடத்திட்டத்தில் தேவாரம், திருவாசகம்,நாலாயிர திவ்யப் பிரபந்தம் போன்ற ஆன்மீக நூல்கள் சேர்க்கப்படும். மாணவர்கள் பிற மொழிகள் படிக்க விரும்பினால் அவர்களுக்கு தனி வகுப்புகள் ஏற்படுத்தப்படும். என்று கூறப்பட்டுள்ளது. இதெல்லாம் போக மிக முக்கியமாக கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவரப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.

இந்து கோவில்கள்
தமிழகத்தில் மதம் மாறுவது தடை செய்யப்படும். அதோடு ஹிந்துக் கோவில் நிலங்கள் ஹிந்து அல்லாதவருக்கு வாடகைக்கு, குத்தகைக்கு விடப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 24 வீர சைவர்கள், முத்தரையர்,தேவாங்க நெசவாளர்கள்,தெலுங்கு தேவாங்கர் ஆகியோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பிரிவில் சேர்க்கப்படுவார்கள் என்று பாஜக தனது அறிக்கையில் கூறியுள்ளது.

சர்ச்சை
பாஜக சில விஷயங்களை மிகவும் துணிச்சலாக இந்த தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. இதற்கு எதிராகவும், ஆதரவாகவும் இணையத்தில் பலர் கருத்து கூறி வருகிறார்கள் . எதிர்ப்பு வரும்.. சர்ச்சை ஏற்படும் என்று அஞ்சாமல் பாஜக தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

உத்தர பிரதேசம்
கிட்டத்தட்ட உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இருப்பது போன்ற சட்டங்களை இங்கு அமல்படுத்த போவதாக பாஜக கூறியுள்ளது. அதோடு இந்து மத மேம்பாடு, சீர்திருத்தம் ஆகியவற்றை மனதில் வைத்து இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. பாஜக தொலைநோக்கு பத்திரம் என்ற பெயரில் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications