"நம்பர் 1".. தரமான 3 அரசு பள்ளிகளுக்கு காத்திருக்கும் "சர்ப்ரைஸ்".. தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் சிறந்த மூன்று பள்ளிகளுக்கு விருது வழங்கப்பட இருக்கும் நிலையில், இந்த பள்ளிகளை தேர்ந்தெடுப்பதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.. இதுகுறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றும் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துகொண்டே போவதால் அதை அதிகரிக்கும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதிலும், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் பள்ளிகள் திறப்பதும், மூடுவதுமாக இருப்பதால் மாணவர்கள் பெரும்பாலும் 'ஆன்லைன்' மூலமே பாடங்களை கற்கின்றனர்.

முயற்சிகள்: தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு முன்பு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது மிகவும் குறைந்த விலையில் இருந்தது. அதன் பிறகு அரசின் முயற்சிகளால் மாணவர் சேர்க்கை சதவீதம் படிப்படியாக உயர்ந்தது. பலரும் கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க முற்பட்டனர். இதனையடுத்து கடந்த ஆண்டில் மட்டும் 5 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
இப்போது மறுபடியும் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், பல பள்ளிகளில் மாணவர்கள் வருகை குறைவாகவே உள்ளது. அதனால், மாணவர்களின் வருகையை அதிகரிக்க ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.. அந்த வகையில், கடந்த வாரம்கூட, திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சிறப்பு பரிசை அறிவித்திருந்தார்..
திருவாரூர் மாவட்டம்: அதன்படி, திருவாரூர் மாவட்டம் சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் இந்திரா அவர்கள் வரவுள்ள கல்வியாண்டில் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று கூறியிருந்தார். அதுமட்டுமல்ல, அத்துடன் பள்ளியில் சேரும் மாணவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 1 கிராம் தங்கம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்..
இதுஒருபுறம் இருந்தாலும், "அரசு பள்ளிகளைக் கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணியையும் வருகிற 28-ந்தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிக்கல்வித்துறை நடத்தி வருகிறது. இந்த பேரணியில், 1 முதல் 9-ம் வகுப்புகளில் தங்களது குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர் அருகே உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளின் பெயரை உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம். இப்படிப்பட்ட சூழலில்தான், தொடக்ககல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார்..
அறிவொளி அறிவிப்பு: அதில், "அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கல்வி பணியில் முன்னேற்றம் அடையச் செய்யும் விதமாக ஆண்டுதோறும் மாவட்டத்தில் 3 சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து, மாவட்ட வாரியாக சுழற்கேடயங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், 2021-22-ம் கல்வி ஆண்டில் 114 பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, 2022-23-ம் கல்வி ஆண்டில் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் இக்குழுவினர் ஆய்வு செய்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மேற்கொண்ட முயற்சி, உள்கட்டமைப்பு வசதி உள்ளிட்ட 15 பிரிவுகளில் தலா 10 மதிப்பெண் என 150 மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும். இதில் 135 முதல் 150 வரை, 112 முதல் 135 வரை, 112-க்கு கீழ் என 3 பிரிவுகளில் தர மதிப்பீடு வழங்கி, சிறந்த 3 அரசுப் பள்ளிகளை தேர்வு செய்ய வேண்டும். இப்பணிகளை துரிதமாக முடித்து, பரிந்துரை பட்டியலை வரும் ஏப்.26-ம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications