காஸ்ட்லி வாட்ச்சை 4 கோடிக்கு ஆர்டர் செய்த பிரபலம்! அந்த பார்சலை பிரித்து பார்த்ததுமே ஆடிப்போன சென்னை
சென்னை: தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகளும் வெகுவாக அதிகரித்துவிட்டன.. ஆன்லைனில் பல்வேறு நூதன முறைகளை பயன்படுத்தி சைபர் கிரிமினல்கள் பணத்தை திருடி வருகின்றனர். அந்த வகையில் சென்னையிலும் ஒரு மோசடி நடந்துள்ளது.. இது தொடர்பான புகார் தரப்பட்ட நிலையில், போலீசாரின் விசாரணையும் நடந்து வருகிறது. என்ன நடந்தது?
ஆன்லைனில் ஆர்டர் பொருட்களை டெலிவரி செய்ய நேரிடும்போது சில சமயம் மோசடிகள் நடக்கின்றன.. ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களுக்கு பதிலாக, வேறு பொருட்கள் மாற்றி டெலிவரி செய்யப்பட்டுவிடும். அல்லது தரம் தாழ்ந்த அல்லது மோசமான பொருட்கள் டெலிவரி செய்துவிடுகிறார்கள்.

பழைய ஷூ, செருப்பு
சமீபத்தில் பொள்ளாச்சியிலும் ஒரு சம்பவம் நடந்தது.. அங்குலக்குறிச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரிஹரபிரியன் என்பவர், பிரபலமான ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் தனக்கு ஷூ ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார்.. இதையடுத்து, ஆன்லைன் நிறுவனமும் அவருக்கு கூரியர் மூலமாக அனுப்பியுள்ளது.
பணம் செலுத்தி பார்சலை வாங்கி பிரித்து பார்த்தபோது, கிழிந்த ஷூ கிடந்துள்ளது.. அத்துடன், பெண்கள் அணியும் கிழிந்த செருப்பும் அதில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார் மாணவர்.. இதில் கொடுமை என்னவென்றால், அந்த பார்சலை திருப்பி அனுப்பக்கூட மாணவரால் முடியாமல் போனது.
இதுபோலவே, நாம் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக நிறம் அல்லது பொருளோ மாறி இருந்தால் திருப்பி அனுப்ப முடியாத சிக்கல் பலமுறை நேர்ந்துவிடுகிறது.. சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்கு தொடர்பு கொண்டாலும், சரியான பதில் கிடைப்பதில்லை.. அதனால்தான், ஆன்லைன் வர்த்தகத்தில் இதுபோன்று ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தபடியே உள்ளனர்.
பிரபல ஜவுளிக்கடை அதிபர் மகள்
இந்நிலையில், சென்னையிலும் ஒரு சம்பவம் நேற்று நடந்துள்ளது.. அபிராமபுரம் பகுதியில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் பிரபல ஜவுளிக்கடை அதிபரின் மகள் வசித்து வருகிறார்.
இவர், ரூ.4 கோடி மதிப்புள்ள வாட்ச் ஒன்றை வெளிநாட்டில் இருந்து வாங்குவதற்காக புக்கிங் செய்திருக்கிறார்.. பிறகு ஆன்லைன் மூலம் அந்த காஸ்ட்லி கைக்கடிகாரத்தை வாங்குவதற்கு ஏற்பாடும் செய்தார். இதற்காக அட்வான்ஸ் ரூ.2.30 கோடி பணத்தையும் அனுப்பியிருக்கிறார்.
ஆன்லைனில் ஆர்டர்
நேற்று முன்தினம் அதாவது தீபாவளி அன்றுதான், ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யப்பட்ட வாட்ஸ், ஜவுளிக்கடை அதிபர் மகளுக்கு கிடைத்துள்ளது.
அந்த பார்சலை பிரித்து பார்த்ததுமே அதிர்ச்சியில் உறைந்தார் அப்பெண்.. காரணம், ரூ.4 கோடி மதிப்புள்ள வாட்சுக்கு பதிலாக ரூ.400 மதிப்புள்ள சாதாரண வாட்ச் இருந்துள்ளது.
பரபரப்பு புகார்
உடனடியாக சென்னை அபிராமிபுரம் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு புகார் மனு ஒன்றையும் நேற்று தந்துள்ளார்.. அதில், வெளிநாட்டு வாட்சை வாங்கி தருவதாக சொல்லி, அடையாறு போட் கிளப் சாலையில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவர் ஏஜெண்டாக செயல்பட்டுள்ள நிலையில், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும், அட்வான்சாக கொடுத்த ரூ.2.30 கோடியை வாங்கித் தரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த புகார் மனு மீதான விசாரணையை கோட்டூர்புரம் உதவி கமிஷனர் நேரடியாக விசாரித்து வருகிறார். புகார் மனு விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications