"குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்" சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கோரினார் இயக்குநர் கே. பாக்யராஜ்!
சென்னை: நான் பேசியது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன் என இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் பாக்யராஜ் இவ்வாறு பேசியிருந்தார். "பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் - புதிய இந்தியா 2022" எனும் நூல் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் கே பாக்யராஜ் பேசுகையில் பிரதமர் மோடியை குறை சொல்பவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். தன் மீதான விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி செவி சாய்க்காமல் இருக்கிறார்.

3 மாதத்தில் பிறந்தவர்கள்
மோடியை விமர்சனங்கள் செய்பவர்கள் 3 மாதத்தில் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள். ஏன் நான் இதை சொல்கிறேன் என்றால் 3 மாத குழந்தைக்குத்தான் வாய், காது இருக்காது என்று தெரிவித்திருந்தார். குறை பிரசவம் என பாக்யராஜ் கூறியதால் மாற்றுத்திறனாளிகள் கடும் கோபத்திற்கு ஆளாகினர்.

பேராசிரியர் கண்டனம்
பாக்யராஜின் கருத்துக்கு பேராசியர் தீபக்நாதன் கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலி ! அக்குழந்தைகளின் பெற்றோர் வலி தெரியுமா நடிகர் பாக்கியராஜ் அவர்களே? அரசியல் எதிரிகளை விமர்சிப்பவர்கள், குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நீங்கள் சொல்வது ஊனமுற்றோரின் இயலாமையை கைக்கொண்டு அதை குறைத்து பேசி, அரசியல் ஆதாயம் காணும் முயற்சி.

இயற்கையின் அங்கமில்லையா?
அரசியலில் உங்கள் எதிரிகளை விமர்சிக்க ஏன் ஊனத்தை கையிலெடுக்கிறீர்கள்? நாங்கள் இயற்கையின் அங்கமில்லையா? எங்களுக்கும் மான உணர்ச்சி உண்டு ஐயா! தொடர்ந்து அரசியல்வாதிகள் புண்படுத்துகிறார்கள் என கேள்வி எழுப்பியிருந்தார். இயக்குநர் பாக்யராஜ் பேசியிருந்தது சமூகவலைதளங்களிலும் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியது.
|
பாக்யராஜ் வீடியோ
இந்த நிலையில் கே பாக்யராஜ் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். இதுகுறித்து இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் கூறுகையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நான் பேசிய போது குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது அதிர்ச்சி அளிக்கிறது. குறைப்பிரசவம் என்ற வார்த்தையை மாற்றுத்திறனாளிகளை குறிப்பிடவில்லை.

பாஜக இல்லை
கிராமத்தில் ஒரு மாதம் இரு மாதம் முன்பே பிறக்கும் குழந்தைகளை குறை பிரசவம் என்பார்கள். ஆனால் குறை இருக்காது. நான் பேசியது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன். மாற்றுத்திறனாளிகளை நான் அக்கறையுடனேயே பாரக்க்கிறேன். எப்போதும் அப்படியேதான் இருப்பேன். நான் பாஜக இல்லை. திராவிடத் தலைவர்களை பார்த்து வளர்ந்தவன். தமிழகத்தில் பிறந்து தமிழில் படித்து, தமிழ் சினிமா என்றுதான் வளர்ந்து வந்துள்ளேன். சினிமாவில் திராவிட இயக்கங்களின் கருத்துகள் இருக்கும். இனியும் அது தொடரும் என்றார்.












Click it and Unblock the Notifications