திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!
சென்னை: திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய நிறுவனத்தின் சொத்துகளை அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்கத்துறை குற்றச்சாட்டிற்குப் பின் நீதிமன்ற உத்தரவை அடுத்து ரூ.89 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்ததோடு ரூ.908 கோடி அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவையும் ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.
சிங்கப்பூர் மற்றும் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கடந்த 2020-ஆம் ஆண்டு ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. சிங்கப்பூரில் உள்ள போலி நிறுவனங்கள் மூலம் சுமார் 42 கோடி ரூபாயும், இலங்கையில் 9 கோடி ரூபாயும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது.

இந்த விசாரணையின் அடிப்படையில் ஜெகத்ரட்சகன், அவரது மகன் மற்றும் மகள் ஆகியோருக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையை எதிர்த்து ஜெகத்ரட்சகன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தற்போது அந்தச் சொத்து பறிமுதல் உத்தரவை உச்ச நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் இரண்டு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதுவரை பழைய உத்தரவுகள் எதையும் கருத்தில் கொள்ளாமல் புதிய விசாரணையை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சொத்துக்கள் பறிமுதல் நடவடிக்கை சட்டப்படி செல்லத்தக்கது அல்ல, அடிப்படை ஆதாரமற்றது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே விதிமீறல்களுக்காக சுமார் 908 கோடி ரூபாய்க்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம், சொத்து பறிமுதல் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications