முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கில் ‘ட்விஸ்ட்’.. தம்பி மகள் உடந்தை.. வாக்குமூலம் கொடுத்த தந்தை!
மஸ்தான் கொலை வழக்கில், அவரது தம்பி மகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பியும், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் துணை தலைவராக இருந்தவருமான மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பி மகள் ஹரிதா ஷாஹினா கைது செய்யப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரியப்பாவை கொல்ல ஹரிதா ஷாஹினா உடந்தையாகச் செயல்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி இரவு தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் துணை தலைவரும், முன்னாள் எம்.பியுமான மஸ்தான் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தபோது சென்னை கூடுவாஞ்சேரி அருகே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது.

சந்தேக மரணம்
உயிரிழந்த முன்னாள் திமுக எம்.பி மஸ்தானின் முகத்தில் காயம் இருந்ததால் கூடுவாஞ்சேரி காவல்துறையினர் இந்த வழக்கை சந்தேக மரணம் என மாற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தச் சம்பவத்தில், மஸ்தானின் உறவினர்களே அவரைத் திட்டமிட்டுக் கொலை செய்தது அம்பலமானது. இதுதொடர்பாக மஸ்தானின் டிரைவராக இருந்த அவரது தம்பி மருமகன் இம்ரான் பாஷா, மஸ்தானின் உறவினரான சுல்தான், அவரது நண்பர்கள் நசீர், தவ்பீக், லோகேஷ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மூச்சுத்திணற வைத்து கொலை
இம்ரான் பாஷா, முன்னாள் எம்.பி மஸ்தானிடம் 15 லட்சம் வரை கடனாக பெற்றதும், அதனை மஸ்தான் திரும்பக் கேட்டு வந்ததால் தனது நண்பர்களுடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி மஸ்தானை தனியாக காரில் அழைத்துச் சென்று மூச்சுத் திணற வைத்து கொலை செய்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. அதன் பின்னர் நெஞ்சுவலியால் மஸ்தான் இறந்ததாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மஸ்தானை கொலை செய்யத் திட்டமிட்ட இம்ரான் பாஷா, மூச்சுத் திணறலால் மாரடைப்பை ஏற்படுத்துவது எப்படி என இணையத்தில் தேடியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தம்பியும் கைது
போலீசாரின் தொடர் விசாரணையில், மஸ்தான் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அவரது தம்பி கௌசே ஆதாம்பாஷாவும் கைது செய்யப்பட்டார். மஸ்தான் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட டிரைவர் இம்ரான் பாஷாவுடன் மஸ்தானின் தம்பி கௌசே ஆதம்பாஷா செல்போனில் அதிக நேரம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த செல்போன் உரையாடல் குறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.

பண பிரச்சனை
அதில் மஸ்தான் கொலையில் அவரது தம்பிக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்த போலீசார் ஆதாம்பாஷாவினை கைது செய்தனர். காவல்துறையினரிடம் ஆதாம்பாஷா வாக்குமூலம் ஒன்றை அளித்தார். அதில், 5 லட்சம் ரூபாய் கடனைத் திரும்பக் கேட்டதால் நண்பர்களின் உதவியுடன் அண்ணனைக் கொன்றதாகவும், பூர்வீக சொத்து தகராறு மற்றும் பணப் பிரச்சனையே மஸ்தான் கொலைக்கு முக்கியக் காரணம் என்றும் தெரியவந்தது.

தம்பி மகள் கைது
இந்நிலையில், மஸ்தானின் தம்பி ஆதாம்பாஷாவை காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்ததில் தனது மகள் ஹரிதா ஷாஹினா (26) இந்த கொலையில் தனக்கு உடந்தையாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கூடுவாஞ்சேரி போலீசார் ஹரிதா ஷாஹினாவையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது வரை மஸ்தான் கொலை வழக்கில், அவரது தம்பி, தம்பி மகள், மருமகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications