சென்னையை அலறவிடும் பறவை காய்ச்சல்.. மனிதர்களுக்கு பரவுமா? சிக்கன் சாப்பிடலாமா? மருத்துவர் விளக்கம்
சென்னை: நகரில் பல்வேறு இடங்களிலும் காகங்கள் திடீரென உயிரிழந்த நிலையில், அதில் நடத்தப்பட்ட சோதனையில் பறவைக் காய்ச்சல் காரணமாகவே காகங்கள் உயிரிழந்தது தெரிய வந்தது. சென்னையில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ள சூழலில், நாம் என்ன செய்ய வேண்டும்.. சிக்கன் உள்ளிட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டுமா என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
சென்னை அடையார் பகுதியில் கடந்த சில நாட்களாக காகங்கள் மர்மமான முறையில் உயிரிழந்து வருகிறது. சில நாட்களில் பல நூறு காகங்கள் உயிரிழந்துள்ளது பொதுமக்களுக்கு இடையில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆரம்பத்தில் சாதாரண உயிரிழப்பாக இது கருதப்பட்ட நிலையில் தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் தான் இது ஆபத்தான வைரஸ் பாதிப்பு என்பது தெரிய வந்துள்ளது.

பறவைக் காய்ச்சல்
பொதுமக்களிடையே இது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இது மனிதர்களுக்குப் பரவுமா? அல்லது மற்ற பறவைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா? இந்தப் பாதிப்பால் சிக்கன் சாப்பிடலாமா.. முட்டை சாப்பிடலாமா எனப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பாகக் கால்நடை மருத்துவர் டாக்டர் கிஷோர் குமார், நமது ஒன் இந்தியா தளத்திற்குச் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அது குறித்து நாம் பார்க்கலாம்.
இது குறித்து கால்நடை மருத்துவர் கிஷோர் குமார் கூறுகையில், "H5N1 வைரஸ் அதாவது, பறவைக் காய்ச்சல் சென்னையில் கண்டறியப்பட்டுள்ளது உண்மைதான். குறிப்பாகக் கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகள், அடையாறு, ஈசிஆர், புள்ளிக்காரனைப் பகுதிகளில் பரவியுள்ளது. இடம்பெயர்ந்து வரும் பறவைகளால் தான் இப்போது இது பரவி இருக்கிறது.

காகங்கள் உயிரிழப்பு
சுமார் 1000 முதல் 1800 வரையிலான காகங்கள் இதனால் உயிரிழந்து இருக்கும் எனச் சொல்கிறார்கள். அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வத் தகவல் இதுவரை வரவில்லை. சென்னையில் தான் பிரதானமாகப் பரவி இருக்கிறது. அதைத் தாண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளிலும் பரவி இருக்கிறது. பீகாரில் இருந்து வந்த பறவைகள் மூலம் இது பரவியதாகச் சொல்கிறார்கள்" என்றார்.
மனிதர்களுக்குப் பரவுமா?
இந்தக் காய்ச்சல் பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுமா என்ற கேள்விக்கு அவர், "அதற்கான வாய்ப்பு ரொம்பவே குறைவு. இந்த வகைப் பறவைக் காய்ச்சல் மனிதர்களைத் தாக்காது. மனிதர்களைத் தாக்கக்கூடிய பறவைக் காய்ச்சல் வகை வேறு. இப்போது பரவும் வைரஸ் வேறு. இருந்தாலும், பறவைகளைக் கையாளும் வேலை செய்பவராக இருந்தால் கிளவுஸ், மாஸ்க் போட்டுக் கொள்வது சரியாக இருக்கும். உங்கள் ஏரியாவில் காகம் அல்லது வேறு பறவைகள் உயிரிழந்து கிடந்தால் மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கவும்" என்றார்.
சிக்கன் சாப்பிடலாமா?
பறவைக் காய்ச்சல் பரவும் சூழலில் சிக்கன் சாப்பிடலாமா.. பாதுகாப்பானதாக என்ற கேள்விக்கு, "இதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. முட்டை, சிக்கனில் இருந்து தான் நமக்குப் புரதம் கிடைக்கிறது. எனவே, சாப்பிடாமல் இருப்பது சரியாக இருக்காது. நன்கு சமைத்துச் சாப்பிட்டாலே போதும். அதேநேரம் ஆஃப் பாயில், பச்சை முட்டை அல்லது பகுதியளவு சமைத்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்" என்றார்












Click it and Unblock the Notifications