பிறப்புச் சான்றிதழ் பிழைகளை திருத்துவது எப்படி? முழுமையான வழிகாட்டி மற்றும் எளிய நடைமுறைகள்
சென்னை: ஒரு நபரின் சட்டப்பூர்வ அடையாளத்தை நிரூபிப்பதில் முதன்மையான ஆவணமாகத் திகழ்வது பிறப்புச் சான்றிதழ். இதில் பெயரிலோ அல்லது எழுத்துக்களிலோ ஏதேனும் பிழைகள் இருக்குமானால், அது வருங்காலத்தில் தேவையற்ற சட்ட போராட்டங்களுக்கு வழிவகுத்துவிடும்.. அதனால்தான், இத்தகைய சிக்கல்களை தவிர்க்க, பிறப்பு சான்றிதழில் உள்ள பிழைகளை சரியான நேரத்தில், முறையான வழிமுறைகளை பின்பற்றித் திருத்திக்கொள்வது அவசியம்.. அதனை செய்வதற்கான எளிய நடைமுறைகளை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
பிறப்பு சான்றிதழ் என்பது ஒரு மனிதனின் முதல் மற்றும் மிக முக்கியமான சட்டப்பூர்வ ஆவணமாகும். இது ஒருவரின் குடியுரிமை, வயது மற்றும் அடையாளத்தை உறுதிப்படுத்துகிறது...

கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, கடவுச்சீட்டு (Passport) விண்ணப்பித்தல், அரசு நலத்திட்டங்களைப் பெறுதல் என வாழ்வின் ஒவ்வொரு முக்கிய கட்டத்திலும் இந்த ஆவணம் அவசியமாகிறது. எனவே, இதில் உள்ள தகவல்கள் பிழையின்றி இருப்பது மிகவும் முக்கியம்.
பதிவு செய்யும் நடைமுறை
குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பினைப் பதிவு செய்வது சட்டப்படி அவசியமாகும். பொதுவாக, மருத்துவமனைகளில் குழந்தை பிறக்கும்போது, அங்கிருந்தே நகராட்சி அல்லது ஊராட்சி அலுவலகங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுப் பதிவு செய்யப்படுகிறது.
21 நாட்களுக்குள் பதிவு செய்தால் எவ்விதக் கட்டணமும் இன்றி சான்றிதழைப் பெறலாம்... ஒருவேளை இந்த காலக்கெடுவைத் தவறவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தாமதத்திற்கான காரணத்தைக் கூறி, சிறிய அபராதக் கட்டணத்தை செலுத்திப் பதிவு செய்ய வேண்டியிருக்கும்.
எழுத்துப் பிழைகளைத் திருத்துதல்
சான்றிதழில் தந்தை பெயர், தாய் பெயர் அல்லது குழந்தையின் பெயரில் சிறிய எழுத்துப் பிழைகள் ஏதாவது இருந்தால், அதைச் சரிசெய்வது எளிது. இதற்கு நீங்கள் வசிக்கும் பகுதியின் உள்ளாட்சி அலுவலகத்தில் உள்ள சுகாதார ஆய்வாளர் அல்லது கிராம நிர்வாக அலுவலரை அணுக வேண்டும்...
பெற்றோரின் ஆதார் அட்டை, மருத்துவமனை வழங்கிய டிஸ்சார்ஜ் சம்மரி போன்ற ஆதாரங்களைச் சமர்ப்பித்து, ஒரு பிரமாணப் பத்திரத்துடன் விண்ணப்பித்தால், அதிகாரிகள் சரிபார்த்து பிழையைத் திருத்தி புதிய சான்றிதழை வழங்குவார்கள்.. இதற்குத் தமிழக அரசின் அரசிதழில் (Gazette) விளம்பரம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
பெயர் மாற்றம் செய்யும் முறை
பிறப்புச் சான்றிதழில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பெயரை முழுமையாக மாற்ற விரும்பினால், அதற்கான நடைமுறை சற்று விரிவானது...
முதலில் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அல்லது அரசு அச்சகத்தின் மூலம் வெளியிடப்படும் அரசிதழில் பெயர் மாற்ற அறிவிப்பை வெளியிட வேண்டும்... 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குப் பெற்றோரே விண்ணப்பிக்கலாம். 60 வயது கடந்தவர்கள் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால், மருத்துவரிடம் பெற்ற ஆயுள் சான்றிதழ் கட்டாயமாகும்.
இதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலமாகச் செலுத்தி, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அரசிதழில் பெயர் மாற்றம் வெளியான பிறகு, அந்த நகலை ஆதாரமாகக் கொண்டு பிறப்புப் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துச் சான்றிதழில் பெயரை மாற்றிக்கொள்ளலாம்.
டிஜிட்டல் முறையில் சான்றிதழ் பெறுதல்
தற்போது தமிழ்நாடு அரசு பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கியுள்ளது. 2018 ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட அனைத்துப் பிறப்புகளையும் crstn.org என்ற இணையதளம் வழியாக எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம்.
சென்னை போன்ற மாநகராட்சிகளில் தனித்தனி இணையதளங்கள் மூலமும் இந்த வசதி வழங்கப்படுகிறது. சான்றிதழ் தொலைந்து போனாலோ அல்லது கூடுதல் நகல்கள் தேவைப்பட்டாலோ அலுவலகங்களுக்கு அலைந்து திரிய வேண்டிய அவசியம் இப்போது இல்லை.
முக்கியக் குறிப்புகள்
அரசிதழில் ஒருமுறை பெயர் மாற்றம் செய்த பிறகு, மீண்டும் பழைய பெயரையோ அல்லது "என்கிற" என்ற பெயரையோ சேர்க்க அனுமதி இல்லை. மேலும், அரசிதழில் அச்சுப்பிழைகள் இருந்தால் ஆறு மாதங்களுக்குள் முறையிட வேண்டும். பிறப்புச் சான்றிதழில் செய்யும் மாற்றங்களே ஆதார் மற்றும் கல்விச் சான்றிதழ்களில் மாற்றம் செய்ய அடிப்படையாக அமையும் என்பதால், இதில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
அதுமட்டுமல்ல, மேற்கண்ட நடைமுறைகள் தமிழக அரசின் தற்போதைய விதிமுறைகளுக்கு உட்பட்டவை. காலம் காலமாக அரசு சுற்றறிக்கைகள் மூலம் மாற்றங்கள் செய்யப்படக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட உள்ளூர் பதிவு அலுவலகம் அல்லது தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சமீபத்திய அறிவிப்புகளை சரிபார்த்து செயல்படுவது நல்லது...!!












Click it and Unblock the Notifications