அந்த வார்த்தை சொல்லலாமா? மீண்டும் சர்ச்சையில் தயாநிதி மாறன்.. அண்ணாமலை தொடங்கி டெல்லி வரை இடி!
சென்னை: சொலவடை சொல்லி மீண்டும் பாஜகவினரின் கைக்கு தொக்காகச் சிக்கியுள்ளார் திமுக எம்.பி தயாநிதி மாறன். அண்ணாமலை தொடங்கி, அமித் மாள்வியா வரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக கூட்டம் ஒன்றில் பேசிய திமுக எம்.பி தயாநிதி மாறன், "ஆங்கிலம் தெரிந்த காரணத்தால் தான் நமது இளைஞர்கள் படித்து ஐடி நிறுவனங்களில் வேலை பார்த்து கை நிறைய சம்பளம் வாங்குகிறார்கள். இந்தி இந்தி என்கிறார்களே.. அவர்கள் நிலையை பாருங்கள். இன்று கட்டடம் கட்டுபவர்கள் எல்லாம் யார்? உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் இந்தி மட்டும் படிப்பவர்கள் தான் இப்போது தமிழ்நாட்டில் தமிழ் கற்றுக் கொண்டு, வீடு கட்டி தருகிறார்கள். சாலையை சுத்தம் செய்கிறார்கள். கழிப்பறை கழுவுகிறார்கள். இதுதான் இந்தி படித்தவர்களின் நிலை" என்றார்.

தயாநிதி மாறன் பேசிய வீடியோ: திடீரென தயாநிதி மாறனின் இந்தப் பேச்சு வீடியோ இணையத்தில் தீவிரமாகப் பரப்பப்பட்டது. பாஜகவினர் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து, திமுகவை கடுமையாக விமர்சித்தனர். மேலும், தயாநிதி மாறனின் பேச்சு குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் தயாநிதி மாறன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், திமுக எம்.பி தயாநிதி மாறன் பேசிய விவகாரத்தை இப்போது கிளப்பிவிடக் காரணம் 'இந்தியா' கூட்டணியை சிதைக்கும் பாஜகவின் திட்டம்தான், தேர்தல் தோல்வி பயத்தில் கூட்டணியில் பிளவை ஏற்படுத்த பாஜகவினர் பழைய வீடியோக்களை பரப்பி விஷம பிரச்சாரம் செய்வதாக திமுக தரப்பில் கூறப்படுகிறது.
சொலவடையால் மீண்டும் சர்ச்சை: இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த முக்கிய நபர்கள் பேசிய பழைய வீடியோக்கள் டிரெண்ட் செய்யப்படுவது குறித்து செய்தியாளர்கள், மத்திய சென்னை எம்.பியும், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளருமான தயாநிதி மாறனிடம் கருத்து கேட்டனர்.
அதற்கு பதிலளித்த தயாநிதி மாறன், "வேலையில்லா முடி திருத்துநர் பூனையைப் பிடித்து சிரைப்பாராம். அதே போலதான், இவர்கள் ஏதாவது ஒரு கலகத்தை உருவாக்க வேண்டும். அதிலும் குறிப்பாக பாஜகவைச் சேர்ந்த ஐ.டி. விங், அதிலும் தேசிய அளவில் இந்த ஐ.டி விங்கை சேர்ந்தவர்கள் ஏதாவது ஒரு பிரச்னையை உருவாக்கி, அதைப் பெரிதாக்கி, பூதாகரமாக்கி அதில் பலன் பெறலாம் என்று நினைக்கிறார்கள். அது எடுபடாது" என்று தெரிவித்தார்.
அண்ணாமலை கடும் விமர்சனம்: திமுக எம்.பி தயாநிதி மாறன் கூறிய சொலவடை அந்த தொழிலை செய்பவர்களை சமூக ரீதியாக இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. தொழில் ரீதியாக அல்லது மொழி ரீதியாக ஒருவரை இழிவுபடுத்துவது திமுக எம்பி தயாநிதி மாறனுக்கு கைவந்த கலையாக உள்ளது" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், "தயாநிதி மாறன் மன்னிப்புக் கேட்பதற்குப் பதிலாக, நமது வட இந்திய சகோதர சகோதரிகள் மீது தனது வசைகளைப் பரப்புபவர்களையும் எதிர்வினையாற்றுபவர்களையும் "வேலையில்லா முடிதிருத்தும் வேலை செய்பவர்கள்" என்கிறார். இந்த தொடர்ச்சியான இழிவுபடுத்தும் பேச்சுகளால், தேர்தல் தோல்வியின் தொடர்ச்சியான சமிக்ஞை கூட 'இந்தியா' கூட்டணி தலைவர்களின் உறுதியை அசைப்பதாகத் தெரியவில்லை என்பது தெளிவாகிறது." என்று கூறியுள்ளார்.
அவமானம் அவமானம்: அண்ணாமலையின் பதிவைப் பகிர்ந்து தயாநிதி மாறனை விமர்சித்துள்ள பாஜக தேசிய ஐடி விங் பொறுப்பாளர் அமித் மாள்வியா, "ஓபிசி பிரிவைச் சேர்ந்த விஸ்வகர்மா சமூகத்தை மேம்படுத்த பிரதமர் மோடி உழைத்து வருகிறார், ஆனால் இங்கே திமுக எம்பி தயாநிதி மாறன், "வேலையற்ற பார்பர்கள்" என்று அவதூறான வார்த்தையைப் பயன்படுத்தி அவர்களை இழிவுபடுத்துகிறார்.
சனாதன தர்மத்தை அழிப்பதாக சபதம் செய்துவிட்டு, இந்தியா கூட்டணி தலைவர்கள் இப்போது OBC மக்களை அவமதிக்கிறார்கள். ஓபிசி மக்களின் உரிமைகளை மறுத்த மம்தா பானர்ஜி போன்றவர்களின் மௌனம் புரிகிறது, ஆனால் OBC அரசியலுக்காக வரிந்துகட்டி வரும் நிதிஷ் குமாரும் ராகுல் காந்தியும் எங்கே? அவமானம்" என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications