மோடி கேபினட்டில் 12 அமைச்சர்கள்.. தெலுங்கானா தேர்தல் பரபரப்புக்கு இடையே அண்ணாமலை சொன்ன டேட்டா!
சென்னை: மோடி அமைச்சரவையில்தான், அருந்ததியர் சமூகத்திற்கும் மடிகா சமூகத்திற்கும், பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது.
மத்திய அமைச்சரவையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 12 அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் மொத்தமுள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வரும் 30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் கட்சியான பிஆர்எஸ், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது. வேட்புமனு தாக்கல் நவம்பர் 3ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 10-ம் தேதியுடன் நிறைவடைந்தது. வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் நாளை (நவம்பர் 15).
தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மடிகா இடஒதுக்கீடு போராட்ட சமிதி சார்பில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, “தெலங்கானா மாநிலம் அமையுமானால் அதன் முதல் முதல்வராக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்தான் இருப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தெலங்கானா மாநிலம் உருவான உடன் அதன் முதல் முதல்வராக கே.சந்திரசேகர ராவ் பதவியேற்றார். இதன்மூலம், தலித்துகளின் விருப்பத்தை அவர் நசுக்கிவிட்டார்” எனப் பேசினார்.
தெலுங்கானா மாநிலத்தில் தலித் வாக்கு வங்கியை குறிவைத்து பாஜக களமிறங்கி இருப்பதாக, சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி விமர்சித்து வருகிறது. இதற்கிடையே, மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பட்டியலினத்தைச் சேர்ந்த 12 பேர் அமைச்சர்களாக இருப்பதாகக் கூறியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் சமூக தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாரதப் பிரதமர் மோடி அவர்கள் நல்லாட்சியில், நாடு முழுவதும் அனைத்துச் சமூகங்களுக்கும் உரிய முக்கியத்துவமும் பிரதிநிதித்துவமும் கிடைக்கப்பெற்று வருகின்றன. நமது நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளில், பாரதப் பிரதமர் மோடி அவர்கள் அமைச்சரவையில்தான், அருந்ததியர் சமூகத்திற்கும் மடிகா சமூகத்திற்கும், பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது.
இரு பெரும் சமூகத்தின் பிரதிநிதிகளாக மாண்புமிகு மத்திய இணையமைச்சர்கள் அண்ணன் எல்.முருகன் அவர்களும், திரு. A. நாராயணசுவாமி அவர்களும், மத்திய அமைச்சரவையை அலங்கரிக்கிறார்கள். மத்திய அமைச்சரவையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 12 அமைச்சர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்கள்.
பட்டியல் சமூக மக்கள் முன்னேற்றத்திற்காக, மத்திய அரசின் இந்த ஆண்டு பட்ஜெட் ஒதுக்கீடு, 1.59 லட்சம் கோடி ரூபாய் ஆகும். ஆண்டு தோறும் இந்த ஒதுக்கீடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நாடு முழுவதும் பட்டியல் சமூக மக்கள் வாழ்வியல் முன்னேற்றத்துக்காகத் தொடர்ந்து நலத்திட்டங்களை நிறைவேற்றி வரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடைபெறும், மடிகா சமூக மக்களின் விஸ்வரூப மகாசபா மாநாட்டில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications