ஏசி ரூமில் உட்கார்ந்து.. இஷ்டத்துக்கு முடிவெடுக்கிறாரா ஸ்டாலின்.. என்ன இப்படி சொல்லிட்டார் அண்ணாமலை
ஸ்டாலின் அண்ணாமலை விமர்சித்து பேசி வருவதற்கு என்ன காரணம்
சென்னை: ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின், இஷ்டத்துக்கு முடிவு எடுப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. உண்மையிலேயே முக ஸ்டாலின் அப்படித்தான் செய்கிறாரா? அண்ணாமலை ஏன் இப்படி பேசுகிறார்?
அண்ணாமலை சமீப காலமாக முதல்வர் ஸ்டாலின் மீது நிறைய விமர்சனங்களை வைத்து வருகிறார்.. குறிப்பாக 10 நாட்களில் உதிர்த்த கருத்துக்கள்தான் இவை:
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தது.. இதுகுறித்து அண்ணாமலை சொல்லும்போது, அறிவாலயத்தின் கண்துடைப்பு நாடகம் என்பது மக்களுக்குத் தெரியும் என்றார்.

முதல்வர்
வேலூரில் ஒரு கூட்டத்தில் பேசும்போது, "தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு கனவு காண்கிறார்... இந்தியாவின் துணை பிரதமராக தான் ஆகிவிட்டு, தனது மகன் உதயநிதி ஸ்டாலினை தமிழகத்தின் முதல்வராக்க வேண்டுமென காய் நகர்த்தி வருகிறார்" என்ற குற்றச்சாட்டை வீசினார்.

வார்த்தைகள்
விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு தடை என்றதும், "எந்த அரசு தடுத்தாலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும்... திமுக அரசு விநாயகரை கையில் எடுத்து அரசியல் செய்தால், அதே விநாயகர் திமுக அரசு முடிவுக்கு வருவதற்கு முடிவுரை எழுதுவார்" என்று மிரட்டல் வார்த்தைகளை விடுத்தார்.. நேற்றைய தினம், "ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இஷ்டத்துக்கு முடிவு செய்யக் கூடாது.. இன்னும் காலம் கடக்கவில்லை. வழிபாடு நடத்த அனுமதிக்கலாம்" என்றார்.

பேச்சுக்கள்
இந்த முறை திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், எத்தனையோ குற்றச்சாட்டுகளை அண்ணாமலை வைத்திருந்தாலும், மேற்கண்ட பேச்சுக்கள் கடந்த வெறும் 10 நாட்களில் மட்டுமே பேசப்பட்டவை.. அத்தனையும் விநாயகர் ஊர்வலத்தை மையமாக வைத்து பேசப்பட்டவை.. இன்னும் ஓபனாக சொல்லப்போனால், கேடி ராகவன் வீடியோ விவகாரம் வெளிவந்தபிறகு பேசப்பட்டவை.

ஸ்டாலின்
அண்ணாமலை பேச்சை 2 வகையாக பார்க்க வேண்டி உள்ளது.. முதலாவதாக, உண்மையிலேயே ஸ்டாலின், ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டுதான் இஷ்டத்துக்கும் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறாரா? இதற்கு பாஜகவினர் தவிர, ஒட்டுமொத்த தமிழக மக்களே பதிலளிக்கும் அளவுக்கு எளிமையான கேள்வியைதான் அண்ணாமலை கேட்டுள்ளார்.. இந்த ஆட்சி பொறுப்பேற்றபோது, தமிழ்நாட்டில் தொற்று மிக மிக மோசமான நிலைமையில் இருந்தது.. ஆபத்தில் இருந்தது.

மா.சுப்பிரமணி
எண்ணி 2 மாதத்தில் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்த திறமை, இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.. மா.சுப்பிரமணியை எதற்காக சுகாதாரத்துறை அமைச்சராக்கினார் ஸ்டாலின் என்ற விடைக்கு அந்த ஒரே மாசத்திலேயே விடையும் கிடைத்துவிட்டது.. ஒருகட்டத்தில் சென்னையைவிட கோவையில் தொற்று அதிகமாகிவிடவும், எங்க கோவையை காப்பாற்றுங்க என்று டெல்லிக்கு பிரச்சனையை கொண்டு போனார் வானதி சீனிவாசன்.

தொற்று
அடுத்த நாளே அங்கு சென்றார் முதல்வர்.. கோவை மக்களின் அச்சத்தை நீக்கும் வகையில் நேரடியாகவே கொரோனா வார்டுக்குள் சென்று தைரியமூட்டினார்.. சுகாதாரத்துறையின் அடுத்தடுத்த முயற்சிகளால் 2 மாதத்தில் தொற்று தமிழகத்தில் குறைந்து கொண்டு வரப்பட்டது ஸ்டாலினின் மிக முக்கிய சாதனையாகும்.. இப்படியான சாதனையை வெறும் ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு மட்டுமே செய்துவிட முடியாது.

களப்பணி
இது ஒரு உதாரணம்தான், திமுக அரசு அறிவித்த நலத்திட்டங்களாகட்டும், வாக்குறுதிகளை நிறைவேற்றிய அறிவிப்புகளாகட்டும், எல்லாமே களப்பணியில் இறங்கி, புள்ளிவிவர தரவுகளுடன், மிஸ்டர் கிளீன் என்று சொல்லப்படும் அதிகாரிகளை கொண்டு அனைத்துமே செயல்படுத்தப்பட்டு வருகிறது... பல வருடங்கள் கழித்து சட்டசபையில் சபை நாகரீகம் மிளிர்ந்து காணப்படுகிறது.

நயினார்
இதெல்லாம் பாஜகவுக்கு தெரியாமல் இல்லை.. இதே பாஜகவில் உள்ள மூத்த தலைவர்கள் பொன்.ராதா முதல் நயினார் நாகேந்திரன் வரை திமுகவின் செயல்பாடுகளை பாராட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. அப்படியானால் இந்த 10 நாளில் அண்ணாமலை, திமுகவையும், ஸ்டாலினையும் சாட என்ன காரணம்? தேவையே இல்லாமல் புழுதி வார தூற்ற என்ன காரணம்?

அண்ணாமலை
விஷயம் இதுதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. அவர்கள் சொல்லும்போது,"கேடி ராகவன் விவகாரத்தை அண்ணாமலை சரியாக கையாளவில்லை என்பதே பிரதான காரணம்.. மதன் என்ற பிரபலமாகாத நபரிடம், கட்சி விஷயத்தையும், கட்சி நிர்வாகிகள் பற்றியும் தேவையில்லாமல் விவாதித்ததும், விமர்சித்ததும் சர்ச்சையை கட்சிக்குள் கிளப்பி உள்ளது.. ராகவன் மீதான தனிப்பட்ட முறையில் அண்ணாமலை, தன்னுடைய அதிருப்தியை தீர்த்து கொண்டதாக கூறப்பட்டது.

டெல்லி
பாஜகவின் மானம், டெல்லி வரை பறந்துள்ளது.. அண்ணாமலை மீதான புகார்கள் வாசிக்கப்பட்டன.. இதைக் கேள்விப்பட்டதுமே மேலிடம் கொந்தளித்துள்ளது.. இதனால் அண்ணாமலையின் பதவிக்கே ஆபத்து என்ற சூழலும் உருவானது.. தேர்தல்கள் வர உள்ளநிலையில், பதவியில் இருந்து நீக்கினால் அது தங்கள் கட்சிக்கு மேலும் சிக்கலை உண்டுபண்ணும் என்பதாலும், ராகவன் விஷயத்தின் கொந்தளிப்பு இன்னும் அடங்கவில்லை என்பதாலும், இந்த விஷயத்தை இப்போதைக்கு ஆற போட மேலிடம் நினைத்துள்ளது.

அண்ணாமலை
அதற்காகவே அண்ணாமலையை வாய்மொழியாக கண்டித்தும் அனுப்பியுள்ளனர்.. இந்த பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்பவே, விநாயகர் சதுர்த்தி விஷயத்தை அண்ணாமலை கையில் எடுத்ததாகவும், திமுகவை சீண்டி, அதற்கு மாற்று தாங்கள் தான் என்பதை காட்டிக் கொள்ள முயன்று வருவதாகவும் தெரிகிறது" என்றார்கள்.

முதல்வர்
ஒருவேளை இந்த கருத்துக்கள் எல்லாம் உண்மையா என்று தெரியவில்லை.. ஆனால், ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு மட்டுமே ஒரு மாநில முதல்வர் ஆட்சி செய்துவிட முடியாது.. அப்படியே புழுதிவாரி தூற்றினாலும், அதை துளிகூட நம்ப தமிழக மக்கள் தயாராக இல்லை என்பதே உண்மை..!












Click it and Unblock the Notifications