அரசு வழக்கு பதியுது.. திமுக எம்.பி மனு கொடுக்கிறார்.. கோரமண்டல் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு: பாஜக
சென்னை: எண்ணூர் கோரமண்டல் தொழிற்சாலை விவகாரத்தில் திமுக அரசின் இரட்டை நிலைப்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
சென்னை எண்ணூரில் கடற்பரப்பில் இருந்து கோரமண்டல் தனியார் உர ஆலைக்கு கடலுக்கு அடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த டிசம்பர் 26ஆம் தேதி நள்ளிரவில் வாயு கசிந்தது. இதனால் ஆலைக்கு அருகே உள்ள சின்னகுப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் உள்ளிட்ட 8 கிராமங்களில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால் கொந்தளித்த அப்பகுதி மக்கள்,கோரமண்டல் ஆலையை முற்றுகையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கோரமண்டல் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட 7 பேர் கொண்ட குழுவினர், அந்த நிறுவனம் தற்காலிகமாக செயல்பட தடை விதித்து நோட்டீஸ் ஒட்டினர். பின்னர் மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஐஐடி நிபுணர்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் ஆகியோர் அடங்கிய குழு கோரமண்டல் தொழிற்சாலையை ஆய்வு செய்தது. அந்தக் குழு, ஆலை மீண்டும் இயங்க அனுமதி அளித்தது. இந்நிலையில், வடசென்னை திமுக எம்.பி கலாநிதி வீராசாமி, கோரமண்டல் ஆலையை மூட வேண்டும் என மத்திய அமைச்சரை சந்தித்து மனு அளித்தார்.
இது தொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை எண்ணூர் கோரமண்டல் உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அமோனியா கசிவு ஏற்பட்ட விவகாரத்தில், ஒரு பக்கம் கோரமண்டல் நிறுவனத்திற்கு எதிராக போராடும் மக்களுக்கு எதிராக திமுக அரசால் வழக்குகள் தொடரப்படுகிற நிலையில், திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் அந்த நிறுவனத்தை மூட வேண்டும் என கோரிக்கை விடுக்கும் இரட்டை நிலைப்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மக்களை சமாதானப்படுத்தி, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டிய மாநில அவர்களை வழக்கு தொடர்ந்து மிரட்டி பார்ப்பதும், பிரச்சினை என்ன? எங்கிருந்து, எப்படி, ஏன் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அம்மோனியா கசிவு ஏற்பட்டது என்று கண்டுபிடித்து இனி இது போன்ற நிகழ்வுகள் நடக்காது இருப்பதை நிறுவனத்தின் நிர்வாகத்தின் மூலமும், அரசு இயந்திரத்தின் மூலமும் உறுதி செய்து மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டிய அரசு, நிலைமையை கட்டுப்படுத்தாமல் மேலும் மேலும் சிக்கலை உண்டாக்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பிரச்சனையை நீடிக்க விடாமல் போராடும் மக்களின் மீது பதிந்த வழக்குகளை உடனடியாக ரத்து செய்வதோடு, குழாய்களில் ஏற்பட்ட கசிவு குறித்து வெளிப்படையான தகவல்களை அளிக்க தமிழக அரசு முன் வர வேண்டும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications