செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் ஊழியர்களுடன் பாஜக நிர்வாகிகள் மோதல்.. அப்போது நடந்த ட்விஸ்ட்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி என்பது செங்கல்பட்டு நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது. சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையான ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ளது. இந்த சுங்சச்சாவடி பல வருடங்கள் ஆன போதும், இன்னும் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்சச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் செல்ல சிலர் முயன்றதாக கூறப்படுகிது. இதனால் ஏற்பட்ட தகராறில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், பாஜக நிர்வாகிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான புகாரில் போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி, அதன் அசல் முதலீட்டை விட அதிக தொகையை வசூல் செய்துவிட்ட போதிலும், விதிகளைத் திருத்தி சுங்கக் கட்டணத்தை வசூலிப்பதாகப் புகார்கள் நீண்ட காலமாக உள்ளது. பரனூர் சுங்கச்சாவடியை மூடவேண்டும் என்று உள்ளூர் மக்கள் பலர் இன்று வரை கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

அகற்றப்படவில்லை
எனினும் அந்த சுங்கச்சாவடி இன்று வரை தொடர்கிறது. பொதுவாகவே சுங்கச்சாவடிகள் காலாவதியான பின்னர் இயங்க மத்திய அரசின் முடிவு காரணமாக இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலையை பராமரிக்க வேண்டும் என்றும், அதற்கு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று வசூலிக்க மத்திய அரசு அனுமதித்து வருகிறது. செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் செல்ல சிலர் முயன்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக நிர்வாகி பயணம்
செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த 41 வயதாகும் சசிகுமார், பா.ஜனதா வக்கீல் அணி மாநில செயலாளராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த மகேஸ்வரன், பா.ஜனதா செங்கல்பட்டு நகர செயலாளராக பதவி வகித்து வருகிறார். இருவரும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வக்கீலாக பணி செய்து வருகின்றனர்.
தாம்பரத்திற்கு காரில் பயணம்
நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி இருவரும் ஒரே காரில் சென்று கொண்டிருந்தார்கள். பரனூர் சுங்கச்சாவடி வந்தபோது ஆம்புலன்ஸ் உள்ளிட்ட முக்கிய வாகனங்கள் செல்லும் அவசர பாதையில் காரில் செல்ல முயன்றுள்ளனர். அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள், காரை நிறுத்தி சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்வதை சுட்டிக்காட்டி வக்கீல்களை அவதூறாக பேசியதாக சொல்லப்படுகிறது.
ஒரு மணி நேரம் கட்டணமில்லை
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள், வக்கீல்கள் தரப்பை சேர்ந்தவர்கள் என மொத்தம் 30-க்கும் மேற்பட்டோர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டிருந்தார்களாம். அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் வாகனங்கள் சுங்கச்சாவடியை இலவசமாக கடந்து போய்விட்டன. இதுகுறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரின்பேரில் செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஜக நிர்வாகி சசிகுமார் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர் கோபால் (45) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications