எடப்பாடி என் நண்பர்.. ஸ்டாலின் சொன்னார்.. ஆண்டவர் செய்தார் – ஹெச்.ராஜா தக்லைஃப்
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வெளிநாடு சென்றிருப்பதால் அந்தக் கட்சிக்கு வழிநடத்தல் குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஹெச். ராஜா அதன் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடனான நட்பு குறித்து விவரித்துள்ளார்.
தமிழக பாஜக வழிநடத்தல் குழு ஒருங்கிணைப்பாளர் ஹெச் ராஜா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குளித்தலையில் இப்போதைய தமிழ்நாடு முதல்வரும், அப்போதைய எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் சான்றிதழ் அளித்த ஊழல்வாதி செந்தில் பாலாஜி. அதற்கு இப்போது அனுமதியும் கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, 'திமுக ஆட்சிக்கு வரும். அப்போது செந்தில் பாலாஜி சிறையில் இருப்பார்.' என்று கூறியிருந்தார்.

திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. செந்தில் பாலாஜி சிறைக்கும் சென்றுவிட்டார். ஸ்டாலின் சொன்னதை ஆண்டவனே நடத்திவிட்டார். தமிழகத்துக்கு, மத்திய அரசு குறைவான நிதி ஒதுக்குவதாக யார் சொன்னது. நேற்றைக்கு கூட, பிரதமர் இரண்டு வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்துள்ளார். அப்போது இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு மட்டுமே தமிழகத்துக்கு ரூ.6,000 கோடிக்கு மேல் ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த பத்து ஆண்டுகளில், மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.10.6 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. அதுவே திமுக - காங்கிரஸ் கூட்டணி இருந்த 2004 - 2014 ஆகிய பத்து ஆண்டுகளில், தமிழகத்துக்கு ரூ.2.3 லட்சம் கோடி தான் ஒதுக்கப்பட்டது. அதை போல நான்கு மடங்கு அதிக நிதியை மத்திய பாஜக அரசு ஒதுக்கியுள்ளது.
என்னுடைய கேள்விக்கு தமிழக முதலமைச்சரோ, நிதியமைச்சரோ பதில் சொல்ல வேண்டும். உங்களின் சென்ற பட்ஜெட்டில், உற்பத்தி மற்றும் முதலீட்டு செலவுக்கு எவ்வளவு சதவீதம் ஒதுக்கியுள்ளீர்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக மாநில நிதியமைச்சர் வழங்க வேண்டும்.
உள் கட்டமைப்பு மற்றும் மூலதனத்துக்கு நீங்கள் எதுவுமே ஒதுக்க மாட்டீர்கள். இங்கு நடப்பது எல்லாமே மத்திய அரசு திட்டங்கள் தான். ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும், ஐந்து கிலோ அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றில் மாநில அரசுக்கு எந்த பங்கும் கிடையாது. நாடு முழுவதும் இப்படி 80 கோடி பேருக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் தொகையை இணைத்தால் கூட இந்த எண்ணிக்கை வராது. அந்தளவுக்கு மத்திய அரசு சிறப்பாக செயல்படுகிறது.
நொண்டி குதிரைக்கு சறுக்கியது சாக்கு, என்பது போல கையாலாகாத தமிழக திராவிடியன் ஸ்டாக் அரசாங்கம் இவர்களின் ஊழலை மூடி மறைக்க, மத்திய அரசை தொடர்ந்து குறை சொல்கிறார்கள். அதிமுக எப்படி செயல்படுகிறது. நண்பர் எடப்பாடி அந்தக் கட்சிக்கு எம்.டியா அல்லது சேர்மனா.
அதிமுகவினர் எதுவாக இருந்தாலும் யோசித்து பேச வேண்டும். வார்த்தைகள் இருக்கிறது என்பதற்காக பேசக்கூடாது. நான் பாஜக கட்சி தொடங்கியபோது முன்னிலையில் இருந்தவன். பலரும் ராஜா பதவியிலேயே இல்லை என்று நினைக்கின்றனர். தொடர்ந்து 32 ஆண்டுகளாக கட்சி பொறுப்பில் இருக்கிறேன். இப்போதும் கட்சி தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளேன்.
இன்றைக்கு கட்சியை வழிநடத்தும் குழுவுக்கு ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். பல அதிமுக அமைச்சர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, நான் பாஜகவை தொடங்கி, இருந்து கொண்டிருக்கிறேன். எடப்பாடி இப்போதும் நண்பர் இல்லை என்று சொல்லவில்லை. எல்லோரும் நண்பர்கள் தான். எங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு அனைத்து கட்சி நிர்வாகிகளும் வருவார்கள். எல்லோர் மீதும் மரியாதை வைத்திருக்கிறோம்." என்றார்.












Click it and Unblock the Notifications