பாஜக 20, பாமக 10.. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி எண்ணிக்கை.. அறிவித்தார் அண்ணாமலை
சென்னை: பாஜக வேட்பாளர் பட்டியலை தேசிய தலைமை எந்த நேரத்திலும் அறிவிக்கலாம் என்றும் 39 தொகுதிகளிலும் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளது என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தமிழக அரசியல் களம் பரபரப்பை அடைந்துள்ளது. திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. இதேபோல் அதிமுகவும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள 33 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது.

தமிழக அரசியல் களத்தில் தற்போது 4 முனை போட்டி நிலவுகிறது. அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், நாம் தமிழர் கட்சி ஒரு அணியாகவும் என 4 முனை போட்டி நிலவுகிறது. இதில், திமுக, அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. பாஜக தமிழகத்தில் போட்டியிடும் தொகுதிகளை அறிவிக்காமல் இருந்தது.
பாஜக 20 தொகுதிகளில் போட்டி: இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு, புதுவையில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் பாஜக வேட்பாளர் பட்டியலை தேசிய தலைமை எந்த நேரத்திலும் அறிவிக்கலாம் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
39 தொகுதிகளிலும் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளது. பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் புதுவையில் பாஜக 20 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது.

எந்தெந்த தொகுதிகளில் யார் யார்?: 4 தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். பாஜக வேட்பாளர் பட்டியலை இன்று மாலை முதல் எப்போது வேண்டும் என்றாலும் எதிர்பார்க்கலாம். எந்தெந்த தொகுதிகளில் யார் யார் போட்டி என்ற விவரங்கள் ஒபிஎஸ் பேட்டிக்கு பிறகு அறிவிப்போம்" இவ்வாறு அவர் கூறினார்.
பாஜக மற்றும் பாஜக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதிகள் விவரம்:
பாஜக - 20
பாமக - 10
தமிழ் மாநில காங்கிரஸ் - 3
அமமுக - 2
ஐஜேகே - 1
புதியநீதி கட்சிக்கட்சி - 1
தமமுக - 1
இந்திய மக்கள் முன்னேற்ற கழகம் - 1
ஓ பன்னீர் செல்வம் அணி போட்டியில்லை?: தமிழ்நாட்டில் திமுக, அதிமுக தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது. பாஜக கூட்டணியில் மட்டும் இழுபறி நீடித்து வந்தது. அதிமுக கூட்டணியில் சேரப்போவதாக கூறப்பட்ட பாமக திடீர் திருப்பமாக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. அந்த கட்சிக்கு பாஜக 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இதேபோல் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 2 தொகுதிகளை பாஜக ஒதுக்கியுள்ளது.
ஆனால் ஓ பன்னீர் செல்வத்திற்கு இதுவரை தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. குறிப்பாக ஓ பன்னீர் செல்வம் 3 தொகுதிகள் வரை பாஜகவிடம் கேட்டதாகவும், தனி சின்னத்தில் போட்டியிட விரும்பியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பாஜக சம்மதம் தெரிவிக்காததாலேயே, இந்த லோக்சபா தேர்தலில் ஓ பன்னீர் செல்வம் அணி போட்டியிட வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications