கர்நாடகாவில் அடக்கி வாசித்த பாஜக.. மோடி இமேஜை நம்பித்தான் இருக்கு.. பத்திரிகையாளர் மணி பேட்டி!
சென்னை : "கடந்த நான்கு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக எடியூரப்பா, பசவராஜ் பொம்மையை நம்பி ஓட்டு கேட்கவில்லை. மோடியின் இமேஜை நம்பித்தான் பாஜக கர்நாடகா தேர்தல் களத்தில் இருக்கிறது." என ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் மணி கூறுகையில், "கர்நாடகாவில் அப்பட்டமான மதவாத அரசியலை கையில் எடுத்த பாஜக ஓராண்டு காலத்திலேயே பின்வாங்கியது. பசவராஜ் பொம்மையை முதல்வராக்கிய பிறகு ஹிஜாப் விவகாரம், ஹலால் விவகாரங்களை கிளப்பியது பாஜக. ஆனால் வட இந்தியா போல செய்தால் இங்கு வேலைக்கு ஆகாது என்பதால் அதனை அடக்கி வாசித்தார்கள். இன்னொரு பக்கம், லிங்காயத் + வொக்கலிகர் + தலித் பிரச்சனைகளும் இருந்துகொண்டிருக்கிறது.

பாஜக அரசியல் : கர்நாடகாவில் இந்துத்வா அரசியலை கொண்டு வர எடியூரப்பா தடையாக இருப்பார் என்றே அவரை மாற்றியது பாஜக. பசவராஜ் பொம்மையாலும் தீவிரமான இந்துத்வா அரசியலை அங்கு செயல்படுத்த முடியவில்லை. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை பாஜகவின் நுழைவாயில் கர்நாடகா தான். 1991ல் கர்நாடகாவில் முதன் முதலில் பாஜகவிற்கு ஒரு எம்.பி கிடைத்தது கர்நாடகாவில் தான்.
பாஜக கர்நாடகாவில் நல்ல மெஜாரிட்டியோடு ஆட்சிக்கு வந்ததில்லை. அதேசமயம், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு என நிரந்தரமாக ஒரு வாக்கு வங்கி இருந்து கொண்டிருக்கிறது. 2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 38% வாக்குகள் பெற்றது. ஆனால், பாஜக 36% வாக்குகள் பெற்றிருந்தாலும் அதிக சீட்களைப் பெற்றது.
ஊழல் : கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் ஊழல் புதிய சிகரங்களைத் தொட்டது. எல்லா கட்சியினரும் இடம்பெற்றுள்ள கர்நாடகா ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர், கர்நாடகா அரசில் 40% கமிஷன் கேட்பதாக வெளிப்படையாக குற்றம்சாட்டினர். ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அதை பெரிய அளவில் முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் மேற்கொண்டது.
மோடி இமேஜ் : மோடியின் இமேஜை நம்பித்தான் பாஜக இருக்கிறது. பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குப் பிறகு 20 இடங்களில் பிரச்சாரம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்திற்காக களமிறக்கப்பட்டுள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக எடியூரப்பா, பசவராஜ் பொம்மையை நம்பி ஓட்டு கேட்கவில்லை. எதிர்க்கட்சிகள் எந்த மாநிலத்திலாவது முதல்வர் வேட்பாளரை சொல்லவில்லை என்றால், முதல்வராக நிற்பதற்கு தகுதியான வேட்பாளரே இல்லை என ஏகடியம் செய்வார்கள். ஆனால், இன்று கர்நாடகாவில் சி.எம் வேட்பாளரை சொல்லாமல் தான் தேர்தலைச் சந்திக்கிறார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications