திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்த எச்.ராஜா.. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊடக நிகழ்வில் பங்கேற்றபோது எச்.ராஜா திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் இன்று என்டிடிவி ஊடகத்தின் தமிழ்நாடு சம்மிட் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், இன்று சென்னை கிண்டியில் நடைபெற்று நடைபெற்று வரும் இந்த ஊடக நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் பலரும் பங்கேற்று தங்களின் கருத்துக்களை அதில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைந்த இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, அன்பில் மகேஷ், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தவெக தேர்தல் பரப்புரை செயலாளர் அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று இரவு நடந்த விவாதத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பங்கேற்றார். விவாதத்தின் போது எச். ராஜா திடீரென மயங்கி விழுந்தார். அவர் கீழே விழப்போன மேடையில் இருந்தவர்கள் சுதாரித்துப் பிடித்தனர். சர்க்கரை அளவு குறைவாக இருப்பதாக கருதப்பட்டு அவருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. எனினும், அவரால் நிற்க முடியவில்லை.
மூளை பக்கவாதம் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்பட்டதால், உடனே அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி கொடுத்தனர். MRI மற்றும் CT ஸ்கேன்களை எடுத்தனர். பின்னர் அவர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications