இதே வேலையா போச்சு.. நீதிபதி முதல் சாமானியன் வரை தரக்குறைவாக பேசுறாரு ஆர்.எஸ்.பாரதி.. வானதி தாக்கு!
சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிபதி முதல் சாமானியன் வரை அனைவரையும் தரக்குறைவாக பேசி வருகிறார் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே கடுமையான வார்த்தை மோதல்கள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தி வருவதோடு, திராவிட கொள்கைக்கு எதிரான வகையிலும் ஆளுநர் கருத்து தெரிவித்து வருவதால் ஆளுநர் vs திமுக அரசு மோதல் முற்றியுள்ளது.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி, "ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுக்கு தொல்லை கொடுத்து வருகிறார். வேண்டுமென்றே தமிழக அரசை வம்புக்கு இழுக்கிறார். ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன். யாரும் தப்பா நினைத்துக்கொள்ள வேண்டாம். நாய்க்கறி உண்ணும் நாகாலாந்து மக்களே சுரணையுடன் ரவியை துரத்தி, அந்த மாநிலத்தை விட்டு ஓட ஓட விரட்டினார்கள். அப்போ உப்பு போட்டு சாப்பிடும் தமிழர்களுக்கு எந்த அளவு சொரணை இருக்க வேண்டும்." எனப் பேசியுள்ளார்.
ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பேச்சுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆர்.எஸ்.பாரதியின் பேச்சை இந்தி, ஆங்கில சப்டைட்டிலோடு சமூக வலைதளத்தில் பகிர்ந்து, கண்டனம் தெரிவித்தார். ஆர்.எஸ்.பாரதியை தமிழக காவல்துறை கைது செய்விட்டால் நாகாலாந்து காவல்துறை வந்து கைது செய்து அழைத்துச் செல்லும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், திமுகவினர் தொடர்ந்து மற்றவர்களை தரக்குறைவாக விமர்சிப்பதும், பின்னர் ஏதாவது ஒரு விளக்கம் கொடுப்பதும் தொடர்கதையாகிவிட்டது, குறிப்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிபதி முதல் சாமானியன் வரை அனைவரையும் தரக்குறைவாக பேசி வருகிறார் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திமுகவினர் தொடர்ந்து மற்றவர்களை தரக்குறைவாக விமர்சிப்பதும், பின்னர் ஏதாவது ஒரு விளக்கம் கொடுப்பதும் தொடர்கதையாகிவிட்டது. குறிப்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிபதி முதல் சாமானியன் வரை அனைவரையும் தரக்குறைவாக பேசி வருகிறார்.
ஆளுநர் ஆர்.என் ரவியை விமர்சனம் செய்வதாக கூறி ஒரு மாநிலத்தின் ஒட்டு மொத்த மக்களையும் தரக்குறைவாக பேசியுள்ளார். நாகாலாந்து மக்கள் நாய்க்கறி உண்பார்கள் என கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். ஒரு மாநில மக்களை இழிவுபடுத்திய ஆர்.எஸ்.பாரதியை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளதை 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் வரவேற்கிறார்களா? இல்லை என்றால் இன்னும் அவரை கண்டிக்காதது ஏன்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications