விஜய் செய்த சைகை.. வேறு யாராக இருந்தால் கைது பண்ணி உள்ளே போட்டிருப்பார்கள்! நயினார் கடும் டென்ஷன்
சென்னை: சட்டசபையில் தமிழக முதல்வர் விஜய் சைகை காட்டியது மற்றும் அப்பாவை காணோம் என்று பேசியது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சட்டசபையில் அப்பாவை காணோம் என சினிமா மாதிரி வசனம் பேசுவது என்பது அநாகரீகமான செயல்.. இதே இது இப்படி கை காட்டியிருந்தால், வேற யாராக இருந்தால் கைது பண்ணி உள்ளே போட்டிருப்பார்கள்.. என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். குட்டிக் கதை சொல்லி, அப்பாவை காணோம் என மு.க ஸ்டாலின் கொளத்தூரில் தோற்றது குறித்து விமர்சித்து பேசினார். மேலும், 5 நிமிஷம் பேசியதற்கே கொளத்தூர் ஆட்டம் கண்டுவிட்டது என விமர்சித்து விஜய் பேசியிருந்தார். இறுதியில் திமுக காங்கிரஸ் இடையே கூட்டணி அமைந்த போது, செய்தியாளர்கள் கேட்டதற்காக ஸ்டாலின் சைகை ஒன்றை காட்டியிருந்தார். அதனை விமர்சிக்கும் விதமாகவும் விஜய் அதே சைகையை சட்டசபையில் செய்து காட்டினார்.

நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்
விஜய்யின் இந்த பேச்சுக்கும் தவெகவுக்கு ஆதரவு அளித்த சிபிஎம், சிபிஐ மற்றும் விசிகவும் கடும் விமர்சனங்களை தெரிவித்தன. இதே போன்று திமுகவும் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் செங்கல்பட்டில் கணவனை காணும் என மனைவி தேடுவதாக போஸ்ட் போட்டு விமர்சித்து இருந்தார். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த சைகையை வேறு யாராவது செய்திருந்தால் கைது பண்ணி உள்ளே போட்டிருப்பார்கள் என கூறியுள்ளார்.
இது குறித்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நீங்க சைகையை மட்டும் தான் கேட்கிறீங்க.. முதல்வரை பொறுத்தவரையில் அப்பாவை காணும்.. அப்பாவை காணும் என தேடுகிறார்.. அதை யாரும் கேட்க மாட்டுக்கிறார்கள்.. பொதுவா ஒரு குழந்தைக்கு அப்பா யாரு என்று கேட்டால், அம்மா சொன்னால் தான் தெரியும்.. அது நானாக இருந்தாலும் அப்படித்தான்.. என் அம்மா சொல்லி தான் எனக்கு அப்பா யார் என்று தெரிஞ்சுருக்க முடியும்.
கைது பண்ணி உள்ளே போட்டிருப்பார்கள்
ஆனால் சட்டசபையில் அப்பாவை காணோம் என சினிமா மாதிரி வசனம் பேசுவது என்பது அநாகரீகமான செயல்.. இதே இது இப்படி கை காட்டியிருந்தால், வேற யாராக இருந்தால் கைது பண்ணி உள்ளே போட்டிருப்பார்கள்.. ஆனால் அதனை எந்த இடத்தில் சொல்லக் கூடாதோ.. யார் இதனை சொல்லக்கூடாதோ.. அதையெல்லாம் தவிர்த்துவிட்டு, இப்போது மாணவிகளுக்கு நடந்த உயர்க்கல்வித்துறை அமைச்சர் பிரச்சனையாக இருந்தாலும் சரி.. அண்ணன் செங்கோட்டையன் பேசும் வார்த்தைகளாக இருந்தாலும் சரி.. இவர்கள் எல்லாருக்கும் மக்கள் நலனில் அக்கறை இல்லை.
உயர்கல்வி அமைச்சர் செய்தது தவறு
அப்பா யாரு என்று சட்டசபையில் பேசுவது என்பது தேவையில்லாத ஒன்று.. அது அவருடைய பண்பை, தகுதியை, தகுதியை இழந்து காட்டுகிறது என்பது தான் என்னுடைய பகிரங்கமான கருத்து. இப்படி சைகை காட்டுவது என்பது கடும் கண்டனத்துக்குரியது. அதுவும் சட்டசபையில் காட்டுவது என்பது கடும் தண்டனைக்குரியது.. உயர்க்கல்வித்துறை அமைச்சர் செய்வதை வீடியோவில் பார்த்தேன்.. அவர் அதை தவிர்த்து இருக்க வேண்டும்..
இந்த வீடியோ உண்மையா என தெரியவில்லை. ஏஐ வீடியோவாக கூட இருக்கலாம். இது எல்லாம் தெரியாது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால் அந்த வீடியோவில் அமைச்சர் அப்படி செய்வதை தவிர்த்து இருக்க வேண்டும். மாணவிகள் யோகா பண்றாங்க.. அப்போது அமைச்சர் இப்படி பண்ணுவது தேவையில்லாதது.. இந்த வீடியோ உண்மையாக இருந்திருந்தால் கடும் கண்டத்துக்குரியது.. இவ்வாறு அவர் கூறினார்.















Click it and Unblock the Notifications