சாதி ஒழிப்பே எங்கள் கொள்கை.. பெரியார் சமூகநீதி நாளை வரவேற்ற நயினார்.. திரும்பி பார்க்க வைத்த பாஜக
சென்னை: பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததற்கு தமிழ்நாடு பாஜக சட்டசபையில் வரவேற்பு தெரிவித்துள்ளது.
பெரியாரின் பிறந்த நாளை இனி சமூக நீதி நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் இன்று தெரிவித்தார். இது தொடர்பாக இன்று அவையில் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின். சமூக நீதியின் அடித்தளமாக விளங்கியவர் பெரியார்.
இந்தியா முழுமைக்கும் சமூக நீதி பாடம் எடுத்து, சுயமரியாதை கருத்துக்கள் நாடு முழுக்க பரவ முக்கிய காரணமாக இருந்தவர் பெரியார். மற்றவர்கள் பேச தயங்கியதை, எழுத தயங்கியதை எழுதியவர் பெரியார். எதற்கும் அஞ்சாமல் சமூக நீதிக்காக கடைசி நொடி வரை போராடியவர் பெரியார். சமத்துவத்தை கொண்டு வந்த பகலவன் என்று குறிப்பிட்டார்.

பாஜக
இதையடுத்து சட்டசபையில் பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை வரவேற்கிறோம். சமூக நீதி என்பது பாஜகவின் கொள்கை. சாதி ஒழிப்பு, பெண் விடுதலையே எங்களின் கொள்கையும். பெரியாருக்கும் இதுவே கொள்கையாக இருந்தது. இதனால் அவரின் பிறந்த நாளை கொண்டாடுவதை வரவேற்கிறோம்.

வரவேற்பு
எங்களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது. இதனால் கடவுள் நம்பிக்கையொரு பாஜக பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவிப்பதை வரவேற்கிறது, என்று குறிப்பிட்டார். பாஜக கட்சியை சேர்ந்த எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் இப்படி திடீரென பெரியார் பிறந்தநாள் விழாவை பாராட்டி பேசியது பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.

ஏன்?
பாஜக உறுப்பினர்கள் யாருமே இன்று அவையில் இந்த அறிவிப்பிற்கு எதிராக பேசவில்லை. முக்கியமாக பாஜக கட்சி வெளியே பலமுறை மேடைகளில் பெரியாருக்கு எதிராக பேசி உள்ளார். பாஜக உறுப்பினர் எச். ராஜா பெரியாருக்கு எதிராக சில மேடைகளில் பேசி இருக்கிறார். ஆனால் இன்று அவையில் பெரியார் பிறந்த நாள் குறித்த அறிவிப்பை பாஜக எந்த ஆட்சேபனையும் இல்லாமல் வரவேற்றது கவனத்தை ஈர்த்தது.

அர்ச்சகர்
முன்னதாக இதேபோல் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்திற்கும் பாஜக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்று பேசி இருந்தார். இந்த நிலையில்தான் இப்போது மீண்டும் சமூக நீதி தொடர்பான திமுகவின் இன்னொரு அறிவிப்பை பாஜக வரவேற்று உள்ளது.

அறிவிப்பு
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் தனது அறிவிப்பில் பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும். பெரியாரின் செயல்கள் குறித்து பேச வேண்டுமென்றால் பேசிக்கொண்டே இருக்கலாம். அவரை பற்றி பேசவேண்டும் என்றால் 10 நாட்கள் அவையை ஒத்திவைத்துவிட்டு பேச வேண்டும்.நாடாளுமன்றம் செல்லாமல் சட்டங்களை மாற்ற செய்தவர் பெரியார். இதனால் அவரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும். செப்டம்பர் 17 சமூக நீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் உறுதிமொழி எடுப்பார்கள்,தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிரான அனைத்தையும் எதிர்க்க கூடியவர் பெரியார். மக்களிடையே நிலவும் சமத்துவத்திற்கும், எழுச்சிக்கும் பெரியார்தான் காரணம். அவரை என்றும் திராவிட முன்னேற்ற கழகம் போற்றி புகழும், என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications