96% இந்துக்களுக்கு கல்வி கொடுத்தது கிறிஸ்தவ மத போதகர்கள்.. சபாநாயகர் அப்பாவு பேச்சால் கொதித்த பாஜக!
சென்னை: சபாநாயகர் அப்பாவு, 200 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி, கல்லூரிகள் இருந்தன. அதில் படிக்க, 4 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி இருந்தது, மீதமுள்ள, 96 சதவீத இந்துக்களுக்கு, அருட்சகோதரர்கள், கிறிஸ்துவ மத போதகர்கள் தான் கல்வி அறிவை கொடுத்தனர் எனப் பேசியதற்கு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி 'சட்டசபை நாயகர் கலைஞர்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பங்கேற்றார். இந்த நிகழ்வில் அப்பாவு பேசுகையில், "தமிழ்நாட்டில் 119 ஆண்டுகளுக்கு முன்பு மதராஸ் மாகாணத்தில் 100 பட்டதாரிகள் இருந்தால் அதில் 94 சதவிகிதம் பேர் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தான்.

இந்தியாவில் 200 வருடங்களுக்கு முன்பே பள்ளி, கல்லூரிகள் இருந்தன. ஆனால் 4 சதவீதம் பேர் மட்டுமே படிக்க முடிந்தது. மற்ற 96 சதவீதம் இந்துக்களுக்கு கல்வியை கற்றுக் கொடுத்தது அருட்தந்தையர், அருட்சகோதரிகள், சகோதரர்கள் தான். கிறிஸ்தவ மத போதகர்கள்தான் பள்ளிகளை ஆரம்பித்ததோடு சாதி, மதம் இல்லை அனைவரும் கல்வி கற்க வாருங்கள் என்றார்கள். அந்த அடிப்படையில் தான் தமிழ்நாடு இத்தகைய வளர்ச்சி அடைந்தது. அதை முதல் புள்ளியாக எடுத்துக் கொண்டு திராவிட இயக்கங்கள் இந்த நிலைக்கு கொண்டு வந்து இருக்கின்றன" என்று சபாநாயகர் அப்பாவு பேசினார்.
சபாநாயகர் அப்பாவுவின் இந்தக் கருத்துக்கு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக நாராயணன், "நம் வாலிபர்கள் பாட சாலைகளில் சுதேச மகான்களை பற்றி மிகவும் இழிவான எண்ணங்களை கொண்டு வளர்க்கிறார்கள். முக்கியமாக, கிருஸ்துவ பாடசாலைகளில் இவ்விஷயமாக ஏற்படும் கெடுதிக்கு அளவேயில்லை. வியாசர், யாக்ஞவல்க்யர், சங்கரர் முதலிய ஆயிரக்கணக்கான அவதார புருஷர்களையும், அர்ஜுனன், கர்ணன், விக்ரமன், சிவாஜி முதலிய மஹா வீரர்களையும் பற்றி இவர்கள் கேள்விப்படுகிறதே இல்லை. கேள்விப்பட்டாலும், அவர்களெல்லாம் நவீன நாகரீகம் தெரியாத பைத்தியக்காரர்களென்ற விஷயத்தையே கேள்வியுறுகின்றார்கள்.
தந்தி, மோட்டார் வண்டி முதலிய விஷயங்களை பற்றி கேள்விப்பட்டிராததனால் கம்பன் தெய்வீகமான கவியென்பது பொய்யாய் விடுமா? ஒரு கிருஸ்துவ பாடசாலை உபாத்யாயருடன் பேசிக்கொண்டிருந்த போது, உனக்கு தெரிந்த விஷயங்கள் கூட வியாசனுக்கு தெரியாதே, உங்கள் முன்னோர்களெல்லாம் அநாகரீக ஜனங்கள் என்று கூறினார். இப்படிப்பட்ட உபாத்யாயர்களின் கீழ் நம் குழந்தைகள் இருக்குமானால் இடத்தை தீமை உண்டாக மாட்டாது?
நமது முதலாவது கடமை யாதென்றால், நம் பாடசாலைகளிலே பரத கண்டத்தின் புராதன மஹாத்மாக்களை பற்றி நல்ல பயிற்சி கொடுத்து, இளைஞர்களுக்கு தேச பக்தி, சௌரியம், ஒழுக்கம் முதலியன ஏற்பட செய்ய வேண்டும். சிவாஜியைப் பற்றி சின்க்ளேர் எழுதியிருக்கும் குளறுபடிகளும், உபநிஷத்துகளைப் பற்றி பாதிரிகள் சொல்லியிருக்கும் அபிப்பிராயங்களும் நம் இளைஞர்களின் மூளையிலே ஏறும்படி விட்டு விடுவோமானால் நமது நாட்டிற்கு நாமே பரம சத்துருக்களாக முடிவோம்" என்று 116 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதியார் எழுதியுள்ள கட்டுரையே இது.
நான்கு சதவீதம் நம் நாட்டில் இருப்பது கிருஸ்துவர்கள் தான் என்பது அப்பாவுக்கு தெரியுமா? 200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் விண்ணை முட்டும் அளவிற்கு சர்ச்சுகள் இருந்தனவா? அப்பாவு அவர்களே, அந்த 4 சதவீதம் தான் நம் அறிவார்ந்த சமுதாயத்தை நாசமாக்கியது என்று பாரதியின் வாக்கு சொல்கிறதென்றால் ஏற்றுக்கொள்வீர்களா? நீங்கள் சொன்ன அந்த 4 சதவீத அருட்சகோதரர்கள், கிருஸ்துவ மத போதகர்கள் கல்வி என்ற பெயரில் பாரத கலாச்சாரத்தை சிதைத்து, தங்களின் மதத்தை திணித்தார்கள் என்பதையும், மதமாற்றத்திற்கு வழி வகுத்தார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்கிறீர்களா அப்பாவு அவர்களே? " எனக் கேள்வி எழுப்பியுள்ளார் நாராயணன் திருப்பதி.












Click it and Unblock the Notifications