"பல நூறு கோடி!" வாட்சுக்கு பில் கேட்கறீங்களா.. சீனுக்குள் வந்த நாராயணன்! செந்தில் பாலாஜியிடம் கேள்வி
சென்னை: அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம் குறித்து விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள வாட்ச் குறித்த தான் விவாதம் நடந்து வருகிறது. அவர் கட்டியுள்ள வாட்ச் பல லட்சம் மதிப்பிலானது என்று இணையத்தில் தகவல் பரவியது.
இதற்கு அண்ணாமலை விளக்கமளித்திருந்த நிலையில், இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி சில கேள்விகளைக் கேட்டிருந்தார்.

ரபேல் வாட்ச்
அதாவது சில நாட்களுக்கு முன்பு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 3.48 லட்சத்திற்குக் கடிகாரம் அணியும் ஒரு ஏழை விவசாயி என்று கூறி படம் ஒன்று பரவியது. இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர், "நான் போடும் சட்டை, வேட்டி பற்றியெல்லாம் பேசுகிறார்கள். இந்திய பாதுகாப்புத் துறையில் ரபேல் விமானங்கள் ரொம்பவே முக்கியமானது. அந்த ரபேல் விமான பாகங்களை வைத்து 500 வாட்சுகளை செய்தார்கள். ரபேல் விமானத்தில் உள்ள அனைத்து பாகங்களும் இந்த வாட்ச்சில் இருக்கும். எனக்கு ரபேல் விமானத்தை ஓட்டும் பாக்கியம் கிடைக்கவில்லை.. அதனால் நான் இந்த வாட்ச்சை வாங்கி கட்டியுள்ளேன்.

அண்ணாமலை விளக்கம்
இந்த வகை வாட்ச்சுகள் உலகில் மொத்தமே 500 தான் இருக்கிறது. எனது உயிர் இருக்கும் வரை இந்த வாட்ச் நிச்சயம் எனது உடலில் இருக்கும். ஏனென்றால் நான் ஒரு தேசியவாதி.. பிரிவினைவாதி இல்லை.. ரபேல் நமது நாட்டிற்குக் கிடைத்துள்ள பொக்கிஷம். இது எனது தனிப்பட்ட விவகாரம். நான் எனக்குப் பிடித்ததைச் செய்கிறேன்" என்று கூறியிருந்தார்.. இதற்கிடையே ரபேல் வாட்ச் பில்லை வெளியிட முடியுமா என்று திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியிருந்தார்.

செந்தில் பாலாஜி கேள்வி
அவர் தனது ட்விட்டரில், "பிரான்ஸ் நிறுவனத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம்.வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலை தான் வருமா?" என பதிவிட்டிருந்தார்.

விடாமல் கேட்ட செந்தில் பாலாஜி
இதற்குப் பதிலளித்த அண்ணாமலை மிக விரைவில் தனது ஒட்டுமொத்த சொத்து விவரத்தையும் வெளியிட உள்ளதாகப் பதிலளித்தார். இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, "சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்து 'பல்பு' வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும். தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் 'வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை' என்ற கேள்வியை தவிர்த்துவிடலாம் என 'புத்திசாலித்தனமாக' மே 2021 இல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா?" என கேட்டிருந்தார்.

நராயணன் திருப்பதி
இதற்கிடையே இந்த விவகாரத்தில் பாஜகவின் நாராயண திருப்பதி திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்குப் பதிலடி கொடுத்துள்ளார்... அவர் தனது ட்விட்டரில், "இதற்கிடையே ஒவ்வொரு நாளும் பல நூறு கோடிகளுக்கு விற்பனை செய்யும் டாஸ்மாக் சரக்குகளுக்கு 'பில்' கொடுக்க துப்பில்லாதவர்கள், கையில் கட்டியிருக்கும் 'வாட்ச்'க்கு பில் கேட்பதா?" என்று பதிவிட்டுள்ளார். இதை பாஜக ஆதரவாளர்கள் வேகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

அண்ணாமலை விளக்கம்
முன்னதாக நேற்று பாஜக சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய அண்ணாமலை, "இந்திய அரசியலில் எந்தவொரு அரசியல்வாதியும் செய்யாத ஒரு விஷயத்தை நான் செய்ய உள்ளேன். மிக விரைவில் நான் தமிழகம் முழுக்க நடைப்பயணம் செல்ல உள்ளேன். மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லப் போகிறேன். அதன் முதல் நாள், நான் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வான 2010-11ஆம் ஆண்டு முதல் எனது வங்கிக்கணக்கு நிதி விவரங்களை வெளியிடுகிறேன். கடந்த 13 ஆண்டுகளில் எனக்குக் கிடைத்த வருமானம், நான் செய்த செலவு என அனைத்தும் அதில் இருக்கும். நான் செய்த சின்ன செலவும் அதில் இருக்கும்" என கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications