ராகுல் காந்தி பேசிய அந்த வார்த்தை.. அமித்ஷா முதல் அண்ணாமலை வரை.. மொத்தமாக கொதிக்கும் பாஜக
சென்னை: எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று நாடாளுமன்றத்தில் பேசிய வார்த்தை மொத்த பாஜகவையும் கொந்தளிக்க வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் அமித்ஷா முதல் அண்ணாமலை வரை பலரும் எதிர்வினையாற்றி வருகிறார்கள். அண்ணாமலை கூறியதை பார்ப்போம்.
காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று சபாநாயகர் தொடங்கி பிரதமர் மோடி வரையிலும் சரமாரியாக விமர்சித்தார். மணிப்பூர் தொடங்கி, நாடாளுமன்ற நிகழ்வை ஒளிபரப்பும் சான்சாத் டிவி வரை எதையும் விட்டுவைக்கவில்லை.. சாமி படத்தை வைத்துக் கொண்டு ராகுல் காந்தி பேசிய விதத்ததால் லோக்சபாவில் அனல் பறந்தது.

எதிர்க்கட்சி எம்பிக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து வரவேற்ற நிலையில், பாஜக எம்பிக்களோ, அதெப்படி அப்படி பேசலாம் என்று அங்கே அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் மோடியே ஒருகட்டத்தில் கோபத்துடன் எழுந்து ராகுல் காந்திக்கு பதில் அளித்தார். அமித்ஷாவும் கடுமையான பதிலடி கொடுத்தார். இப்போது அண்ணாமலையும் பதிலடி கொடுத்துள்ளார்.
ராகுல்காந்தி இன்று பேசுகையில், "இங்கு ஒரு மதம் மட்டுமே தைரியத்தை கூறவில்லை. அனைத்து மதங்களும் தைரியத்தைப் பற்றி பேசுகின்றன. இஸ்லாம், சீக்கியம் என அனைத்து மதங்களும் தைரியத்தை வலியுறுத்துகின்றன. உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்களாக இருக்கிறார்கள். பிரதமர் மோடியும், பாஜகவும் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் இல்லை. அயோத்தி பற்றி பேசத் தொடங்கியதும் மைக் அணைக்கப்பட்டது ஏன்? ராமர் பிறந்த அயோத்தியிலேயே பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டார்கள்" என்றார்.
ராகுல் காந்தி பேசும் போதே கொந்தளித்து, இடைமறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது" என்று காட்டமாக கூறினார். இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ராகுல்காந்திக்கு எழுந்து நின்று கடுமையான பதிலடி கொடுத்தார்.
அமித் ஷா பேசும் போது, "இந்து என்று சொல்லிக்கொள்பவர்கள் வன்முறையைப் பேசுகிறார்கள், வன்முறை செய்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகிறார். கோடிக்கணக்கான மக்கள் தங்களை இந்துக்கள் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வது அவருக்குத் தெரியாது போல. வன்முறையை எந்த மதத்துடனும் இணைப்பது தவறு. ராகுல் காந்தி கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.
இதனிடையே ராகுல் காந்தி பேச்சுக்கு அண்ணாமலையும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "எப்போதும்போல, தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தனது உண்மையான நிலை என்னவென்பதை அம்பலப்படுத்தி வருகிறது. கடந்த வாரம் செங்கோல் என்றால், இன்று சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் வழிகளை இண்டியா கூட்டணி கையாண்டு உள்ளது.
இன்று லோக்சபாவில் இந்துக்களை வன்முறையாளர்கள் என்று கூறியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்ற இழிவான கருத்துக்களால் இந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டுள்ளனர். எவ்வ்ளவு பெரிய தோல்வியும் இண்டியா கூட்டணியின் ஈகோவை அடக்கிவிடாதுபோல" என்று அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக எம்பிக்கள் மற்றும் தலைவர்கள் பலர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications