திமுக எம்.பி.யின் மகன் பிறந்தநாள் விழாவில் அண்ணாமலை! அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!
சென்னை: இந்திய ஜனநாயக கட்சித் தலைவரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தரின் மகன் பிறந்தநாள் விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகிறார்.
பாரிவேந்தர் திமுக எம்.பி.யா என்ற கேள்வியும் சந்தேகமும் பலருக்கும் எழும், ஆம் சட்டரீதியாக பார்த்தால் அவர் திமுக எம்.பி.தான். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் பாரிவேந்தர் என்ற பச்சமுத்து.
இந்நிலையில் பாரிவேந்தரின் மூத்த மகனான ரவி பச்சமுத்துவின் பிறந்தநாள் விழாவை, ஐஜேகே வின் எழுச்சி நாளாக சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் இன்று கொண்டாடுகிறார்கள்.

இந்திய ஜனநாயக கட்சி
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அதிபர் பாரிவேந்தர் என்ற பச்சமுத்து இந்திய ஜனநாயக கட்சி என்ற பெயரில் தனி அரசியல் இயக்கம் நடத்தி வருகிறார். இந்தக் கட்சியின் தலைவராக இருப்பவர் பாரிவேந்தரின் மூத்த மகன் ரவி பச்சமுத்து. இதனிடையே எஸ்.ஆர்.எம். மருத்துவமனைகள் மற்றும் நட்சத்திர விடுதிகளை ரவி பச்சமுத்து கவனித்து வருகிறார். இவரது பிறந்தநாளை ஐஜேகேவின் எழுச்சி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம்.

ரவி பச்சமுத்து
அந்த வகையில் ரவி பச்சமுத்துவின் பிறந்தநாள் விழா சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் இன்று மாலை வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. அதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ள ரவி பச்சமுத்து, அவரை தலைமை உரை ஆற்றச்சொல்லி பெருமைப்படுத்தியுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இரண்டு சீட் எதிர்பார்த்து கிடைக்காததால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்தார் ரவி பச்சமுத்து.

பாஜக கூட்டணி
இப்போது பாஜகவை அவர் நெருங்கிச் செல்வதை பார்த்தால் வரும் 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்க ஆயத்தமாகிவிட்டார் போல் தெரிகிறது. இதனிடையே இன்று மாலை அண்ணாமலை பங்கேற்கு ஐஜேகே எழுச்சி நாள் விழாவில் பாரிவேந்தர் என்ற பச்சமுத்து பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது. இது தொடர்பான விளம்பரங்களில் கூட பாரிவேந்தரின் நல் ஆசியுடன் நடைபெறும் விழா என்று தான் குறிப்பிடப்படுகிறது.

பாரிவேந்தர் புலம்பல்
சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பாரிவேந்தர், தாம் அரசியலுக்கு ஏன் வந்தேன் என்பதை நினைத்து வருந்துவதாகவும், இவர்களுடன் கூட்டணி வைத்தால் அவர்கள் கோபித்துக் கொள்கிறார்கள், அவர்களுடன் கூட்டணி சேர்ந்தால் இவர்கள் கோபித்துக் கொள்கிறார்கள் எனவும் மனம் நொந்து புலம்பியது திரும்பிப்பார்க்கத் தக்கது. தமிழகத்தை கடந்து வட கிழக்கு மாநிலங்களிலும் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் இயங்கி வருவது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications