ஆலயங்களை தரிசனத்துக்கு திறக்க வேண்டும்... பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்
சென்னை: தமிழகம் முழுவதும் ஆலயங்களை தரிசனத்துக்காக திறக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இறை தரிசனம் மக்களுக்கு அச்சத்தை நீக்கி ஒரு வித நிம்மதியை அளிக்கும் என அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கை தளர்த்தி இயல்பு வாழ்க்கைக்கும், பொருளாதார நடவடிக்கைகளுக்கும் வழிவகை செய்திருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று என குறிப்பிட்டுள்ளார். மக்கள் பொருளாதார தேக்கத்தில் இருந்து மீள்வதோடு மட்டுமல்லாமல் தேவையற்ற அச்சங்களில் இருந்தும் மீளவேண்டும், மன நிம்மதி பெற வேண்டும் எனமுருகன் கூறியுள்ளார். ஊரடங்கு காலம் பலருக்கு மனச்சோர்வையும், ஒரு வித அச்சத்தையும் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு தீர்வு காணும் வகையில் ஆலயங்களை விரைந்து திறப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆலயங்களை நம்பி தேங்காய் பழத்தட்டு விற்பவர்கள், பிரசாத கடைக்காரர்கள், பூக்கடைக்காரர்கள், பக்தி இசைத்தட்டு விற்பனையாளர்கள், புகைப்படக்காரர்கள் என பலரும் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆலயங்களை திறப்பதன் மூலம் அங்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடக்கும் தினசரி வேள்விகள் தொற்றுக்கு மருந்தாக விளங்கக்கூடும் எனவும், தரிசனம் செய்ய வருபவர்களை சமூக விலகலை கடைபிடித்து ஒருவர் பின் ஒருவராக கூட அனுப்பலாம் என்றும் அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் முருகன்.
பக்தர்கள் நலம், ஆலயங்கள் சார்ந்த ஊழியர்கள் நலன், ஆலயம் சார்ந்த வியாபாரிகள் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் ஆலயங்களை விரைந்து திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முருகன் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications