“கட்டபொம்மன் படம் பார்த்துட்டு”.. வரி செலுத்துவதை நிறுத்துவோம் என்ற ஸ்டாலின் பேச்சுக்கு பாஜக கிண்டல்
சென்னை: "மத்திய அரசுக்கு வரியை தரமாட்டோம் என்று சொல்ல ஒரு நொடி போதும்" என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்த நிலையில், பாஜக அதற்கு பதில் கொடுத்துள்ளது.
கடலுாரில் நேற்று நடந்த அரசு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், "லட்சியவாதிக்கு கொள்கைகள் மட்டும் தான் தெரியவேண்டும். அவதூறுகள், வீண் பேச்சுக்கு நான் கவனம் செலுத்துவதில்லை. அதனால் தான் ஏராளமான திட்டங்களை தீட்ட முடிந்தது. சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் திராவிட மாடல் அரசு செய்து வருகிறது. அதனால் தான் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும், மக்கள் எனக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கின்றனர்.

தேர்தலில் அறிவிக்காத திட்டங்கள், வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. 1.16 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எல்லா வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும் எனப் பார்த்து, பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இது எல்லோருக்கமான ஆட்சி. நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறேன், இந்தியாவில் முன்மாதிரியான அரசு, நம்முடைய திராவிட மாடல் அரசு. ஒவ்வொரு மாநிலமும் வளர்ந்தால் மத்திய அரசும் வளரும். ஆனால், மத்திய அரசு, மாநில வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படுகிறது.
மாநிலங்களுக்கு தரவேண்டிய நிதி மற்றும் திட்டங்களை தொடர்ந்து மறுக்கிறது. தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மாணவர்கள் படித்து முன்னேறுவதை தடுக்க பார்க்கின்றனர். படிக்கக்கூடாது, வேலைக்கு செல்லக்கூடாது என நுாறு ஆண்டுகளுக்கு முன், நம் மக்கள் ஒடுக்கப்பட்டனர்.
ஆண்டுதோறும் வழங்க வேண்டிய ரூ. 2,152 கோடி நிதியை விடுவிக்க வேண்டும் என பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன். அதற்கு, மத்திய கல்வித்தறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம் என கூறியுள்ளார். கல்வியில் அரசியல் செய்வது நீங்களா, நாங்களா? கொடுத்துப் பெறுவது தான் கூட்டாட்சி தத்துவம்.
மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்பது அரசியல் இல்லையா? ஹிந்தியை திணிப்பது, ஒரு மொழி நாடாக மாற்றுவது, ஒற்றை இன நாடாக மாற்ற முயற்சிப்பது நிபந்தனை அரசியல் இல்லையா? தமிழகத்தில் இருந்து எங்களிடம் வாங்கும் வரியை தர முடியாது என கூற, ஒரு நொடி போதும்." என ஆவேசமாகப் பேசி இருந்தார்.
இந்நிலையில், பாஜக தலைவர் வினோஜ் பி செல்வம், முதல்வர் ஸ்டாலினின் இந்தப் பேச்சை விமர்சித்துள்ளார். வரி கொடுக்க மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் பேசியதை, "வரி வட்டி கிஸ்தி.. யாரைக் கேட்கிறாய் வரி, எதற்குக் கேட்கிறாய் கிஸ்தி?" என்ற வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட வசனத்தோடு பொருத்தி விமர்சித்துள்ளார் வினோஜ் பி செல்வம்.
வினோஜ் பி செல்வம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை பார்த்துவிட்டு வந்த யாரோ, முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வசனம் எழுதிக் கொடுத்து மேடையில் பேச வைத்திருப்பதாகத் தெரிகிறது. வரி செலுத்துவதை நிறுத்துவோம் என்று கூறுவதன் மூலமாக கைத்தட்டல்களை பெறலாம். அதைத் தாண்டி எந்தப் பயனும் இல்லை!!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications