இந்தி திணிப்பு பற்றி பேசுவது சரி.. அதை அவர்கள் பள்ளியில் மட்டும் கற்று தரலாமா? கரு.நாகராஜன் கேள்வி
சென்னை: ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி பயன்படுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது சர்ச்சையைக் கிளப்பி உள்ள நிலையில், இது தொடர்பாக பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நாடாளுமன்ற அலுவல் மொழி கமிட்டி 37வது கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய அமித் ஷா 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவை கொடுக்க வேண்டியது அவசியம் என்றார்.

இந்தி
மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர் அமித் ஷா, இந்தி மொழி என்பது உள்ளூர் மொழிகளுக்கு மாற்று அல்ல என்றும் ஆங்கிலத்திற்கு மாற்றாகவே இந்தியை நாம் ஏற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் இந்திய மொழியில் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாஜக
அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் பகுதியில் பாஜகவின் 42வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட கரு.நாகராஜன் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கரு. நாகராஜன்
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கரு. நாகராஜன், "கட்சியின் ஆண்டு விழா பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல அம்பேத்கர் பிறந்த நாளையும் சிறப்பாகக் கொண்டாட உள்ளோம். அமித் ஷா தமிழகம் வருவது குறித்து இன்னும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அவர் தமிழகம் வரும் போது பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க உள்ளோம்.

தமிழகம்
இந்தியாவில் தமிழ்நாட்டைத் தாண்டி எங்குச் சென்றாலும் மும்மொழிக் கொள்கை தான். இங்குத் தமிழகத்தில் மட்டுமே இருமொழிக் கொள்கை இருக்கிறது. இதுதான் நிதர்சனம். கொள்கையில் உறுதியாக இருந்தால்.. இவர்கள் நடத்தும் பள்ளிகளில் மட்டும் இந்தி கற்றுக் கொடுப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், புதிதாக நியமிக்கப்பட மாநில நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வருவதாகவும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications