Exclusive: “கேம் சேஞ்சர் செங்கோட்டையன்”.. பாஜக இந்த முடிவு எடுத்தால்.. அதிரவிடும் அரசியல் விமர்சகர்!
சென்னை: "மேற்கு, தென் தமிழகம், நகரங்களில் பாஜக உடன் கூட்டணி இருந்தால் தாம் தாக்குப்பிடிக்க முடியும் என நினைக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள் செங்கோட்டையன் பின்னால் வருவார்கள். பாஜக செங்கோட்டையனுக்கு சாதகமான முடிவை எடுத்துவிட்டால் எடப்பாடிக்கு பாதிப்பு பலமாக இருக்கும்." என நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று சந்தித்ததும், அதன்பிறகு செங்கோட்டையன் தனியாக டெல்லி சென்று பாஜக மேலிட தலைவர்களைச் சந்தித்ததும் விவாதங்களைக் கிளப்பி வருகின்றன.

அதிமுக உடன் கூட்டணி அமைக்க பாஜக தலைமை விரும்புவதை அமித் ஷாவின் கருத்துகள் பிரதிபலிக்கின்றன. அதற்காக பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்றவும் தலைமை தயாராக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரங்கள் பற்றி நமது ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.
ரவீந்திரன் துரைசாமி பேட்டி
ரவீந்திரன் துரைசாமி கூறுகையில், "ஸ்டாலினும் வேண்டாம் எடப்பாடி பழனிசாமியும் வேண்டாம் என்ற எண்ணம் கொண்ட வாக்காளர்களின் 18% வாக்குகளை நிலையாகப் பெற்று 2029ல் பிரதமர் மோடிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என அண்ணாமலை விரும்புகிறார். எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி அமைத்தால் இந்த வாக்குகளில் பெரும் பகுதி சீமானுக்கு போக வாய்ப்புள்ளது, சிறு பகுதி திமுகவுக்கு செல்ல வாய்ப்புள்ளது. எனவே பொருந்தாக் கூட்டணி அமைக்க அண்ணாமலை விரும்பவில்லை.
அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவராக நீடிப்பதை பெரும்பாலான மாநில தலைவர்கள் விரும்பவில்லை. டெல்லியிலும் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட சிலருக்கும் அண்ணாமலை பதவியில் நீடிப்பது பிடிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பலர் அண்ணாமலை நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர் அளவுக்கு வேறு யாரும் இங்கு கட்சியை வளர்க்கவில்லை என டெல்லிக்குச் சொல்கிறார்கள். எனவே அவர் பதவியில் நீடிக்கவே வாய்ப்புகள் அதிகம். எடப்பாடி பழனிசாமி டெல்லியில் டிமாண்ட் வைக்கக்கூடிய லெவலில் இல்லை.
அதிமுகவுக்கு அடி
செங்கோட்டையன் மீது எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தால் அதிமுக பெரும் அடியைச் சந்திக்கும். அதுவே அதிமுகவை சிதிலமடையச் செய்துவிடும். 20% ஆக இருக்கும் வாக்கு 12% ஆகிவிடும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் புறக்கணித்ததற்கு காரணமே சீமான் தான். 2024 லோக்சபா தேர்தலில் ஈரோடு கிழக்கில் அதிமுக அவ்வளவு செலவு செய்தும் 23% வாக்குகளையே பெற முடிந்தது. சீமான் 8% வாக்குகள் பெற்றார்.
இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி நேரடியாக இறங்கி பிரச்சாரம் செய்து இருந்தாலும் 18% ஐ தாண்டியிருக்க முடியாது. அதேசமயம் நாதக 13% வாக்குகள் பெற்றிருக்கும். ஈரோட்டில் நின்றால் சீமானுக்கும் நமக்கும் 5% வாக்குகள் தான் வித்தியாசம் என்ற நிலை வந்தால் தனது தலைமையின் ஆளுமை போய்விடும், மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப் போய்விடுவோம் என்றுதான் புறக்கணித்தார்.
செங்கோட்டையன் விவகாரம்
செங்கோட்டையன் விவகாரம் நீறு பூத்த நெருப்பாக இருக்கிறது. செங்கோட்டையன் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அபிமானம் பெற்றவர். செங்கோட்டையனை ஈஸியாக தூக்கிப் போட்டால் தனக்கு பாதிப்பு ஏற்படும் என எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். மேற்குப் பகுதி, தெற்கு தமிழகம், நகரங்களில் பாஜக உடன் கூட்டணி இருந்தால் தாம் தாக்குப்பிடிக்க முடியும் என நினைக்கும் எம்.எல்.ஏக்கள் செங்கோட்டையன் பின்னால் வருவார்கள். பாஜக செங்கோட்டையனுக்கு சாதகமான முடிவை எடுத்துவிட்டால் எடப்பாடிக்கு பாதிப்பு பலமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications