தனித்து போட்டி.. "எதிர்க்கட்சி" ஆசையில் அவசரப்பட்டுவிட்டதா பாஜக? காத்திருக்கும் அக்னி பரிட்சை
சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் பாஜகவின் பலம் என்ன என்பது இந்த தேர்தலில் தெரியவரும்.
Recommended Video
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த நிலையில் அதிமுக- பாஜக இடையே இட பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

5 சதவீதம்
இந்த நிலையில் அதிமுகவிடம் 20 சதவீத இடங்களை பாஜக கேட்டதாகவும் அதற்கு அதிமுக 5 சதவீதம் இடங்கள் மட்டுமே தர முடியும் என சொன்னதாகவும் ஒரு தகவல் வெளியானது. இவ்வாறு பேச்சுவார்த்தையின் போதே அதிமுக நேற்றைய தினம் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கூட்டணி முறிவு
இதையடுத்து பாஜகவும் தனித்து போட்டியிடுவது என ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில் பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துவிட்டது. அதிமுகவிடம் இருந்து 10 சதவீத இடங்களை எதிர்பார்த்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபை தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.

ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 5 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்திலும் வெல்லவில்லை. கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரே ஒரு லோக்சபா தொகுதியில் வென்ற பாஜக 5.48 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால் 2019இல் அதன் வாக்கு சதவீதம் 3.66 சதவீதமாக குறைந்தது. அது போல் சட்டசபை தேர்தலிலும் அதிமுக கூட்டணி பாஜக இடம் பெற்று போட்டியிட்டது.

அதிமுகவுடன் கூட்டணி
இந்த தேர்தலில் 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக 4 எம்எல்ஏக்களுடன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபைக்குள் நுழைந்தனர். அதில் 2.62 சதவீதம் வாக்குகளை பெற்றது. இந்த தேர்தல் வெற்றி கூட அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் என விமர்சிக்கப்பட்டது. அது போல் அதிமுக - பாஜக இடையே மோதல் ஏற்பட்ட போதெல்லாம் இதை சொல்லியே விமர்சித்து வந்தது. கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் போட்டியிட்ட ஒரு பாஜக வேட்பாளருக்கு ஒரே ஒரு ஓட்டு கிடைத்ததாக பேசப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் பாஜக இருக்கும் செல்வாக்கு இதுதான் என விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் நகர்ப்புற தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. இந்த தேர்தலில்தான் பாஜகவின் உண்மையான பலமும் வாக்கு சதவீதமும் தெரியவரும்.

திமுக வெர்சஸ் பாஜக
அதிமுகவுக்கு மாற்று நாங்கள் தான் என பாஜக மூத்த நிர்வாகிகள் சொல்லி வந்தனர். அது போல் அதிமுகவின் செயல்பாடுகளையும் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அண்மையில் விமர்சித்திருந்தார். மேலும் வரும் 2026 தேர்தலில் திமுக வெர்சஸ் பாஜக என்ற ரீதியில் போட்டியிருக்கும் என்றே பாஜக தலைவர்கள் சொல்லி வந்தனர். பாஜகுவக்கும் அதிமுகவுக்கும் இடையே வாக்கு சதவீதம் வித்தியாசம் என்பது மிக அதிகமாக இருக்கும் நிலையில் நகர்ப்புற தேர்தலில் அதிமுகவை பாஜக வாக்கு சதவீதத்திலும் வெற்றி எண்ணிக்கையிலும் முந்துமா என்பதையும் திமுக வெர்சஸ் பாஜகவுக்கு சாத்தியமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications