108 முறை "ஓம் நமோ நாராயணாய".. ஜீயர் சாமி சொன்னதில் என்ன தப்புங்கறேன்.. கேட்கிறார் எச். ராஜா !
ஜீயர் சொன்னதில் என்ன தவறு என்று கேட்டு ட்விட்செய்துள்ளார் எச்.ராஜா
சென்னை: "108 முறை ஓம் நமோ நாராயநாய மந்திரம் சொல்ல சொல்லி ஜீயர் சொன்னதில் என்ன தவறு..? கொரோனாவை வெல்ல மருத்துவம் அளவிற்கு இறையருளும் முக்கியம்... இந்து விரோத கனகராஜ், நக்கீரன் கோபால் ஆகியோர் கைது செய்யப்பட வேண்டும்" என்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா முட்டு கொடுத்துள்ளார்.
Recommended Video
உலகமே விழிபிதுங்கி இருக்கிறது இந்த கொரோனாவை நினைத்து.. இன்னும் யாராலும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.. ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் மருந்தை கண்டுபிடிக்க இரவு பகலாக போராடி வருகிறார்கள்.
வைரஸை குணப்படுத்துவதற்காக மட்டுமில்லை, தடுப்பு மருந்துகூட இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.. இந்த வைரஸ் தமிழ்நாட்டையும் விட்டு வைக்காமல், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையுடன் சேர்த்து, பலி எண்ணிக்கையையும் அதிகரித்து வருகிறது.
கொரோனா சிகிச்சை விவகாரம்... தமிழக அரசுக்கு ராமதாஸ் முன்வைக்கும் முக்கிய யோசனை
சிக்கல் பாதை
அதனால் இந்தியாவே ஒரு சிக்கலான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது.. இந்த சமயத்தில்தான், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் "108 முறை ஓம் நமோ நாராயநாய என்ற மந்திரத்தை மக்கள் வீட்டிலிருந்து ஜெபம் செய்தால் மருந்து மாத்திரைகள் தேவையில்லை கொரோனா தானாக ஓடிவிடும்' என்று நேற்று முன்தினம் கருத்து தெரிவித்திருந்தார்.
கிண்டல்
இவரது இந்த கருத்து சோஷியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், கிண்டலும் செய்யப்பட்டது.. அந்த வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கனகராஜ் இது சம்பந்தமாக ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. அதில், ஜீயர் என்றால் பொய் பரப்பலாமா? தணிகாசலம் ஒரு மருந்து சொன்னால் அது தவறென்று கைது செய்தீர்கள்.. இந்த ஜீயர் மந்திரம் சொன்னால் கொரோனா நெருங்காதென்கிறார்.. இது தவறான பிரச்சாரம் இல்லையா? இதை இவர் திரும்ப பெற வேண்டும்.. இல்லையென்றால் அரசு இவரை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
என்ன தவறு?
இந்நிலையில், ஜீயர் சொன்ன கருத்தை நியாயப்படுத்தி அவருக்கு வக்காலத்து வாங்கி ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா.. அதில், கொரோனாவை வெல்ல மருத்துவம் அளவிற்கு இறையருளும் முக்கியம். எனவே அமெரிக்காவில் உள்ள சர்ச் மசூதிகளை அமெரிக்க மாநில ஆளுநர்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என டிரம்ப் கூறினார். எனவே ஜீயர் சுவாமிகள் கூறியதில் என்ன தவறு. இந்து விரோத கனகராஜ், நக்கீரன் கோபால் ஆகியோர் கைது செய்யப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
நிரூபிக்க வேண்டும்
இந்த பதிவை பார்த்ததும் ட்விட்டர்வாசிகள் கொந்தளித்து விட்டனர்.. "அந்த மந்திரத்தை சொல்லிக்கிட்டே ஒரு கொரானா பாதித்த நபரை கட்டி பிடித்து மருந்து மாத்திரைகளை பொய் என்று எச். ராஜா நிருபிப்பாரா? என்றும், ஆஸ்பத்திரி அனைத்தும் நிரம்பி உள்ளது, மேலும் போதுமான மாத்திரைகள் இல்லையென்று செய்திகளும் வரும்போது, இதெல்லாம் என்ன கோரிக்கை? பெட்ரோல் டீசல் விலை உயர்வு அதை பற்றி பேசுவது கிடையாது" என்றெல்லாம் பதிவிட்டு வருகின்றனர்.