திமுகவுக்கு சிக்கல்?.. சர்ச்கள், மசூதிகள், கோயில்கள் முன்பு 7-ம்தேதி ஆர்ப்பாட்டம்.. பாஜக அதிரடி
அண்ணாமலை ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார்
சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து நாட்களிலும் கோயில்களுக்கு செல்ல அனுமதி கோரி, வரும் அக்டோபர் 7ம் தேதி காலை 11.00 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாஜகவின் மாநில தலைமை அறிவித்துள்ளது.
தொற்று பாதிப்பு காரணமாக தமிழகத்தில், 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது..
ஆனால், சமுதாய அரசியல் கலாசார நிகழ்வுகள், திருவிழாக்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும், பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, வெள்ளி, சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக கோரிக்கை
இந்த அறிவிப்புக்கு தமிழக பாஜக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. வாரத்தின் எல்லா நாட்களிலும் கோயில்களைத் திறக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசுக்கு வேண்டுகோளை விடுத்து வந்தார்.. ஒருகட்டத்தில் இது மக்களின் வேண்டுகோள் என்றும் கூற ஆரம்பித்தார்.. அதனால் எங்கு சென்றாலும், எந்த பேட்டி தந்தாலும், மக்களின் வேண்டுகோளை இந்த அரசு கண்டுகொள்ளவில்லை என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டி வருகிறார்.

வாழ்வாதாரம்
அதுமட்டுமல்ல, பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், ஓட்டல்கள் என்று திறந்திருக்கும்போது, வழிபாட்டுத் தலங்களை மட்டும் மூடுவது வஞ்சக எண்ணமாகத்தான் இருக்குமே தவிர, வேறு காரணங்கள் இருக்க முடியாது. என்றும், கோயில்கள் திறக்காததற்கு காரணமாக தொற்றை சொல்வது நகைப்புக்குரியது என்றும் விமர்சித்து வருகிறார்.. அத்துடன் கோயிலை மட்டுமே நம்பியிருக்கும் சிறு, குறு வியாபாரிகள், தேங்காய், பூ, பழம் விற்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்ற பிரச்சனையையும் முன்வைத்து வருகிறார்.

விடுமுறை நாட்கள்
2 நாட்களுக்கு முன்புகூட அண்ணாமலை ஒரு அறிக்கை விடுத்திருந்தார்.. அதில், "திமுக அரசு புனித நாளாக கருதப்படும் வெள்ளி மற்றும் விடுமுறை நாளான சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் திருக்கோயில்களில் மூடுகிறது... அதை மாற்றி வாரத்தின் எல்லா நாட்களிலும் திருக்கோவிலை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது... திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தை மூன்று நாட்கள் தடுத்து நான்காவது நாள் திங்கட்கிழமை அதிக கூட்டத்தை வேகமாக அனுமதிப்பதன் மூலம் நோய் பரவுவதை தடுக்கும் என்று திமுக அரசு சொல்வதை யாரும் ஏற்க முடியாது.

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்கக் கோரி, வரும் 7-ம் தேதி காலை முக்கிய கோயில்கள் முன் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.. நவராத்திரி பண்டிகை நெருங்குவதால், உடனடியாக இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், போராட்டத்துக்கு பிறகும் கோயில்களை திறக்காவிட்டால், இதை மக்கள் இயக்கமாக மாற்றுவோம்" என்றும் அண்ணாமலை எச்சரித்திருந்தார். இந்நிலையில், வார இறுதியில் மதவழிபாட்டு தலங்களை திறக்க கோரி மசூதிகள், தேவாலயங்கள் முன்பும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்..

தொண்டர்கள்
அனைத்து நாட்களிலும் கோயில்களுக்கு செல்ல அனுமதி கோரி, வரும் அக்டோபர் 7ம் தேதி காலை 11.00 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாஜகவின் மாநில தலைமை அறிவித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாப்பூர்
அக்டோபர் 7ம் தேதி மயிலாப்பூர் காளிகாம்பாள் கோவிலுக்கு முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களிடம் போலியான வாக்குறுதிகளை சொல்லி ஏமாற்றியதாக திமுகவை கண்டித்து அதிமுக ஏற்கனவே ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்த நிலையில், பாஜகவும் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது பரபரப்பை கிளப்பிவிட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications