துண்டை போடும் பாஜக.. விட்டுக் கொடுக்காத எடப்பாடி! கோபத்தில் கண் சிவந்த அமித்ஷா! பரபரப்பான கூட்டணி
சென்னை: புதுக்கோட்டை நிகழ்ச்சியில் அதிமுக பாஜக கூட்டணி தலைவர்களை ஒன்றாக மேடையற்ற வேண்டும் என்ற அமித்ஷாவின் கனவு பலிக்காததால் கோபத்துடன் டெல்லி திரும்பி சென்றதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து தான் எடப்பாடி பழனிச்சாமியும் டெல்லி சென்றிருக்கிறார். இந்த நிலையில் கூட்டணி தலைமை அதிகாரத்தை கையில் எடுக்க பாஜக முயற்சித்து வரும் நிலையில் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒத்துழைக்காதால் கூட்டணியில் மீண்டும் சலசலப்பு எழுந்துள்ளதாக கூறுகின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து, கடந்த 2021 தேர்தலில் தங்கள் கூட்டணியில் இருந்த அனைத்து கட்சிகளையும் மீண்டும் என்.டி,ஏ கூட்டணிக்கு கொண்டு வந்து, திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற திட்டத்தில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அதற்காக பல கட்ட முயற்சிகளையும் அந்தக் கட்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில அரசியல் சிக்கல்கள் காரணமாக, பாஜக வகுத்துள்ள செயல்திட்டங்களுக்கு முழுமையாக ஒத்துழைக்காமல், நழுவிக் கொண்டே இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக பாஜக
இதன் காரணமாக, அதிமுக - பாஜக கூட்டணி இன்னும் முழுமையான வடிவத்தை எட்டாமல் இழுத்துக் கொண்டே போகிறது. இந்த பின்னணியில்தான், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு வந்தால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிலவும் அனைத்து குழப்பங்களுக்கும் தீர்வு காண்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. குறிப்பாக, அவரது புதுக்கோட்டை நிகழ்ச்சியில் அதிமுக உள்ளிட்ட என்டிஏ கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும், அங்கே கூட்டணி குறித்த தெளிவான அறிவிப்பு வெளியாகும் என்றும் பேசப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி
ஆனால், அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் காற்றில் கரைந்துவிட்டன. இதற்கு காரணம், அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி தான் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வருவது குறித்த முடிவை இப்போதே எடுத்தாக வேண்டும் என்ற முடிவோடு அமித் ஷா தமிழகம் வந்ததாக சொல்லப்படுகிறது. அதிமுக தங்களுக்கு 80 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும், அந்த தொகுதிகளில் இருந்து கூட்டணிக் கட்சிகளுக்கு பாஜக தானே தொகுதி பங்கீடு செய்து தரும் என்றும் அந்தக் கட்சி வலியுறுத்தியது.
என்டிஏ கூட்டணி
அதாவது, தினகரன், ஓபிஎஸ், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளை பாஜக பார்த்துக் கொள்கிறது என்பதே அந்தத் திட்டம். இதற்காகவே அந்தக் கட்சிகளிடமும் பாஜக முன்கூட்டியே பேசி, அவர்களை காத்திருக்க வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த அணுகுமுறை அதிமுகவுக்கு பிடிக்கவேயில்லை. அப்படி நடந்தால் கூட்டணியை உருவாக்கியது பாஜக என்ற தோற்றம் உருவாகிவிடும். மேலும், பிற கட்சிகள் அனைத்தும் பாஜக சொல்வதைத்தான் கேட்கும் நிலை உருவாகும் என்பதால், இந்த செயல்திட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது.
அமித்ஷா
இதன் காரணமாகவே, அதிமுக பொதுக்குழுவில் கூட்டணிக்கு தலைமை அதிமுக தான்; எந்த கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது என்பது பொதுச் செயலாளர் முடிவு செய்வார் என்ற தீர்மானம் முன்கூட்டியே நிறைவேற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், மீண்டும் இதே மாதிரியான பேச்சுவார்த்தைகள் வளர்ந்து விடக் கூடாது என்பதற்காக, அமித் ஷாவை நேரில் சந்திக்க எடப்பாடி பழனிசாமி செல்லாமல், எஸ்.பி.வேலுமணியை மட்டும் அனுப்பிவிட்டு அவர் சேலத்துக்குப் புறப்பட்டார்.
தினகரன் மற்றும் ஓபிஎஸ்
எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்ததுபோலவே, தினகரன் மற்றும் ஓபிஎஸ் தொடர்பான விவகாரங்களையே அமித் ஷா, வேலுமணியிடம் முக்கியமாகப் பேசியதாக கூறப்படுகிறது. அந்த விவரங்கள் உடனடியாகவே பழனிசாமிக்கு தெரிவிக்கப்பட்டன. ஆனால், அமித் ஷா வைத்த சில நிபந்தனைகளுக்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை மீண்டும் அமித் ஷாவிடம் எடுத்துச் சென்று விளக்கியுள்ளார் வேலுமணி.
பாஜக கூட்டணி முயற்சி
இவ்வாறு பேச்சுவார்த்தைகள் நீண்டுகொண்டே போனதால், எந்த முடிவுக்கும் வர முடியாமல் விரக்தியடைந்த அமித் ஷா, திருச்சியில் பொங்கல் விழாவில் பங்கேற்றுவிட்டு, அரசியல் ரீதியான எந்த முடிவையும் எடுக்காமல் டெல்லி திரும்பினார். இரு கட்சிகளும் இவ்வாறு தனி தனி பாதையில் நகர்ந்து கொண்டிருப்பதால், அதிமுக கூட்டணி இன்னும் இறுதி வடிவத்தை எட்ட முடியாமல் ஊசலாட்டத்தில் உள்ளது. அமித் ஷாவை நம்பி தங்களது முடிவுகளை ஒத்தி வைத்திருந்த சில கட்சிகளும், இனியும் காத்திருந்தால் அரசியல் ரீதியாக சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்து, தங்களுக்கான பாதையைத் தேட ஆரம்பித்துள்ளன.
பாஜக அதிமுக மோதல்
அதன் வெளிப்பாடாகவே, அன்புமணி தலைமையிலான பாமக தன்னிச்சையாக முடிவெடுத்து அதிமுகவுடன் கைகோர்த்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமித் ஷாவை சந்திக்க டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமியின் பயணம், இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவில் திருப்புமுனையா, அல்லது மேலும் தூரத்தை அதிகரிக்குமா என்பதே தற்போதைய அரசியல் கேள்வியாக உள்ளது.











Click it and Unblock the Notifications