12 + 1 இடங்கள் கேட்கும் பாமக.. 7 கொடுக்க தயாரான பாஜக.. லோக்சபா தேர்தல் பேச்சுவார்த்தையில் இழுபறி
சென்னை: பாஜக பாமக இடையே லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமக கேட்கும் தொகுதிகளை பாஜக தர தயங்குவதாகவும் அதனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தமிழக அரசியல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பல முனை போட்டி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணி தொகுதிகளை முடிவு செய்வதற்காக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டது.

லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என பாமக தலைவர் அன்புமணி கூறியிருந்தார். கூட்டணி அமைத்து போட்டியிட பாமக முடிவெடுத்துள்ள நிலையில் அதிமுகவும், பாஜகவும் தங்கள் பக்கம் பாமகவை இழுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
பாஜக தனது கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. ஜிகே வாசன் பாஜக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார். பாஜக கூட்டணியில் இடம் பெற்றால் கணிசமான தொகுதிகள் கிடைப்பது மட்டுமின்றி ராஜ்யசபா இடமும் கிடைக்கும் என்றும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரியவந்துள்ளது.
இதனிடையே பாமகவின் ஒரே கோரிக்கை 12 இடங்களும் 1 ராஜ்யசபா இடமும் கொடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால் பாஜக கூட்டணியில் பிற கட்சிகளும் இணையும் பட்சத்தில் பாமகவிற்கு 7 இடங்களை தர சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனை ஏற்க பாமக மறுத்து வருவதால் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேமுதிக உள்ளிட்ட கட்சிகளிடமும் பாஜக சார்பில் ஜிகே வாசன் பேச்சு வார்த்தை நடத்துவார் என தெரிகிறது. அதே நேரத்தில் பாமக, தேமுதிக உடன் அதிமுகவும் நேரடி பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. விரைவில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் இந்த மாத இறுதிக்குள் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. யாருடைய கூட்டணியில் எந்த கட்சிகள் இணையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு தமிழக வாக்காளர்களுக்கு அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications