சட்டசபைக்கு கறுப்பு சேலை: சபாநாயகர் அப்பாவு கேள்விக்கு "அப்படி" ஒரு பதில் சொன்ன வானதி சீனிவாசன்!
சென்னை: சட்டசபைக்கு கறுப்பு சேலையுடன் வந்த பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், திமுக- காங்கிரஸ் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் விளக்கம் கொடுத்தது அனைவரும் திரும்பிப் பார்க்க வைத்தது.
கர்நாடகாவில் 2019-ம் ஆண்டு பிரசாரம் செய்த மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து விமர்சித்தார். நாட்டில் கொள்ளை அடிப்பவர்களின் பெயர்களுக்கு பின்னால் மோடி என்ற பெயர் இருப்பதாக கூறினார். இது தொடர்பாக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபட்டதை காரணம் காட்டி ராகுலின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. அத்துடன் ராகுல் வெற்றி பெற்ற வயநாடு தொகுதி காலியிடமாகவும் அறிவிக்கப்பட்டது.

ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறது. காங்கிரஸுக்கு ஆதரவாக பாஜகவுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து நிற்கின்றன. தமிழ்நாடு சட்டசபையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கறுப்பு உடை அணிந்து வந்தனர். சட்டசபை வளாகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஊர்வலமாக சென்றனர். புதுச்சேரி சட்டசபையில் இருந்து திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாடு சட்டசபையில் ராகுல் காந்தி விவகாரம் குறித்து பேச அனுமதிக்கப்பட்டது. இந்த விவாத்தின் போது காங்கிரஸ் செல்வப்பெருந்தகை, பாஜக நயினார் நாகேந்திரன் தெரிவித்த சில கருத்துகள் சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.

இதனிடையே காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைப் போலவே பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும் இன்று சட்டசபைக்கு கறுப்பு சேலையுடன் வந்தார். சட்டசபைக்குள் நுழைவதற்கு முன்னரே, செய்தியாளர்கள் வானதி சீனிவாசனிடம் நீங்களும் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்து கறுப்பு சேலையில் வந்துள்ளீர்களா? என கேட்டனர். உடனடியாக இதனை மறுத்த வானதி சீனிவாசன், காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம் பற்றி தமக்கு தெரியாது; யதேச்சையாகவே தாம் கறுப்பு சேலை அணிந்து வந்ததாக கூறினார். சட்டசபை வளாகத்தில் காங்கிரஸ் கட்சியின் விஜயதாரணியும் இது தொடர்பாக வானதியிடம் கேட்க, அவர் சிரித்தபடியே சட்டசபைக்குள் சென்றார்.
சட்டசபையில் சபாநயகார் அப்பாவு, உறுப்பினர் வானதி சீனிவாசன், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைப் போல யூனிபார்மில் வந்துள்ளார் என குறிப்பிட்டார். இதற்கு உடனடியாக பதிலளித்த வானதி சீனிவாசன், தமிழகத்தில் எமர்ஜென்சியின் போது ஆளுங்கட்சியின் தலைவர்கள் எப்படியெல்லாம் சிரமப்பட்டார்கள் என்பதை நினைவூட்டத்தான் கறுப்பு உடையில் வந்திருக்கிறேன் என பட்டென கூறினார். வானதி சீனிவாசனின் இந்த பதில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.












Click it and Unblock the Notifications